

நவீனமான இன்றைய வாழ்க்கையில் உலகில் ஏற்பட்டு வருகின்ற அரசியல், பொருளாதார, சூழலியல் மாற்றங்கள் நம்முடைய அன்றாட வாழ்வில் கொடுமையான விளைவுகளை உண்டாக்கி வருகின்றன. அதன் விளைவாகச் சுற்றுச்சூழல் மாசுபட்டுச் சீரழிந்துவருகிறது. நம் வாழ்வியல் முறையை இந்நிலைமைகள் மெல்ல மெல்ல அழித்துவருகின்ற போக்கைக் கண்டுகொள்ளும் ஆற்றல் இல்லாமல் இயல்பாக/மெத்தனமாக இருக்கிறோம்.
இத்தகுநிலை நம்வாழ்வை அழித்து விடும். கொடுமையான இச்சூழலை உணர்ந்துகொள்ளாமல் யதார்த்தம் இதுதான் என்று அப்பாவித்தனமாக இருந்தால் இறுதியில் என்ன அழிவு நேரும் என்பதைத் தவளையைப் பற்றிக் கூறப்பட்டுள்ள ஒரு செய்தியின் வழியாக இந்நூல் ஆசிரியர் மு.வெற்றிச்செல்வன் அழகாக விளக்குகிறார்.