நோய் தீர்க்கும் வழிமுறைகள் | நூல் வெளி

நோய் தீர்க்கும் வழிமுறைகள் | நூல் வெளி
Updated on
2 min read

மரபான மருத்துவ முறைகளில் பழமையானதும் சிறந்ததுமானது நமது சித்த மருத்துவமாகும். அதை நன்கு கற்றறிந்த மருத்துவர் டி.பாஸ்கரன். எளிய முறையில் கொடிய நோய்களைத் தீர்க்கும் வழிமுறைகளை இந்த நூலில் பகிர்ந்துள்ளார். 20 கட்டுரைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் தன்னளவில் நோய் தீர்க்கும் நிவாரணியாகவே வெளிப்பட்டுள்ளது.

நமது தொன்ம நம்பிக்கை​களில் பொதிந்​துள்ள மருத்​துவம் குறித்த தகவல்​களைப் பதிவுசெய்வதை இந்த நூல் ஒரு கைத்தடியாக ஏந்தி​யுள்ளது. இது இந்த நூலின் சிறப்பான அம்சமாகும். உதாரணமாக, ‘புருசனைச் சுற்று​வதுபோல் அரசனையும் சுற்று’ என்கிற பழமொழியில் உள்ள அறிவியல் உண்மைகளை முதல் கட்டுரையில் மருத்​துவர் ஆராய்ந்​துள்ளார்.

‘அரச வேர் மேல் விரணம் ஆற்றுமுவ் வித்து வெருவ வரும் சுக்கில நோய் வீட்டும்’ என்கிற அகத்தியர் குணபாடத்​தையும் துணைக்கு அழைத்து, அரச மரத்தில் உயிர்ச்​சத்துகள் நிறைந்​துள்ளதைச் சுட்டு​கிறார் நூலாசிரியர். ‘ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்​றி/மூங்கில் போல் சுற்றம் பெருகி’ என வாழ்த்தும் வழக்கம் நம் மரபில் உண்டு. இந்தக் கூற்றை எடுத்​துக்​கொண்டு மருத்​துவர் அருகம்​புல்லின் குணநலன்களை விதந்​தோம்​பு​கிறார்.

பிற்காலத்தில் தோன்றிய பொதுக் கற்பிதங்​களில் உள்ள பிழைகளையும் இந்த நூல் சுட்டிக்​காட்டத் தவறவில்லை. வயிறு முட்டச் சாப்பிடுவது பற்றிச் சில கற்பிதங்கள் நமது வழக்கத்தில் இருக்​கின்றன. ஆனால், அரை வயிறு உணவுதான் உண்ண வேண்டும் எனச் சித்த மருத்​துவம் கூறுகிறது என்கிறார் மருத்​துவர்.

அதற்கான காரண காரியங்​களையும் சொல்கிறார். மீதமுள்ள அரை வயிற்றில் காற்றையும் நீரையும் எடுத்​துக்​கொள்ள இடம் தர வேண்டும் எனச் சொல்கிறார். அதுபோல் உணவைக் கவளம் கவளமாக உண்ண வேண்டும் என்கிறார். மனிதர்கள் 32 கவளம் உண்ண வேண்டும். இது ஒரு கணக்கு. முனிவர் 16 கவளம் உண்ண வேண்டு​மாம்.

இந்த 32 கவளத்தை உண்ணும்போது சவைத்து உமிழ்​நீரைச் சேர்த்​துக்​கொள்ள வேண்டும். இப்படி உண்ணுவதால் ஜீரணப் பிரச்சினை இல்லாமல் இருக்​கும். மேலும், உண்ணும் உணவிலுள்ள சத்துகள் பெரிய அளவில் ஆற்றலாக மாறும் வாய்ப்புள்ளது.

குளிர்​ப​தனப்​பெட்​டி​யில், ப்ரீஸரில் உணவுப் பொருள்​களைச் சேமிக்கக் கூடாது என்றும் அதனால் ஏற்படும் பாதிப்பு​களையும் இந்த நூலில் ஒரு கட்டுரை சொல்கிறது. நோய்களை உண்டாக்கும் நச்சுக் கிருமிகள் அந்த உணவில் உருவாக வாய்ப்புள்ள​தாகவும் கட்டுரை சொல்கிறது.

சீரகத் தண்ணீரின் குணங்​களைச் சொல்லும் கட்டுரையில் இந்தத் தகவலையும் சொல்லிச் செல்கிறார் மருத்​துவர். ஒரு கட்டுரையில் ‘மோரைப் பெருக்கு, நெய்யை உருக்கு’ என்கிற பெருவழக்கின் உண்மைகளை விரித்துச் சொல்கிறார். நாம் இப்போது கடைகளில் தயிரை வாங்கி, அதில் நீர் சேர்த்து மோராகப் பருகி வருகிறோம்.

ஆனால், உண்மையில் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்த பிறகு இருக்கும் பானம்தான் மோர். அதனுடன் மிளகு, சீரகம், பச்சைமிள​காய், கறிவேப்​பிலை, இஞ்சி போன்ற​வற்றைச் சேர்த்துப் பருகுவது அருமருந்து என்றும் நெய்யுடன் முருங்கைக் கீரையைச் சேர்த்துக் காய்ச்சிச் சாப்பிடு​வதால் அதன் கொழுப்பு நீங்கி ஆரோக்​கியம் தரும் என்றும் பகிர்​கிறார். நெய்யை உருக்கியே பயன்படுத்த வேண்டும் என்கிறார்.

நமது பாரம்பரிய மரமான பனையின் சிறப்பு​களையும் இந்த நூலில் சொல்லி​யிருப்பது எடுத்​துக்கூற வேண்டிய விஷயம். பனம்பழம், பனங்கிழங்கு, கருப்​பட்டி, நுங்கு எனப் பனையின் வழி கிடைக்கும் ஒவ்வொரு உணவும், சுவையும் மருத்​துவக் குணமும் நிறைந்தது என்பதை அந்தக் கட்டுரை சுட்டு​கிறது.

இன்றைக்கு முக்கியப் பிரச்​சினையாக இருக்கும் முடி உதிர்வுப் பிரச்​சினைக்கும் இந்த நூலின் ஒரு கட்டுரை மருந்தைப் பரிந்​துரைக்​கிறது. இன்றைக்கு வயதானவர்கள் எதிர்​கொள்ளும் ஒரு உடல் உபாதை, மூட்டு வலி. அதற்கு மூலிகைப் பற்று சரியான தீர்வு எனச் சொல்கிறார். சித்த மருத்​துவத்தின் மகத்து​வத்தை இந்த நூல் சொல்வதன் வழி நமது மரபையும் நோய் தீர்க்கும் நம்பிக்கைகளையும் நமக்கு அளிக்​கிறது.

சித்தாவரம்
சித்த மருத்துவர் டி.பாஸ்கரன்
தேநீர் பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 90809 09600

தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in