தமிழ் அறிஞர் மா.நன்னன் - 100: கற்பித்தலின் மாமன்னன்

தமிழ் அறிஞர் மா.நன்னன் - 100: கற்பித்தலின் மாமன்னன்
Updated on
2 min read

கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக ‘எண்ணும் எழுத்தும்’, ‘அறிவோம் அன்னை மொழி’ ஆகிய தலைப்புகளில் எளிய நடையில் வலிய உதாரணங்களுடன் பிழையின்றித் தமிழ் எழுத மா.நன்னன் நடத்திய நிகழ்ச்சிகள் தமிழ்க் கொடை. கற்பித்தலில் புதிய அணுகுமுறையைப் புகுத்தியவர் அவர். ‘நன்னன் கற்பித்தல் முறை’ என்றே அது பெயர் பெற்றது.

புலவர் மா.நன்னன் பிறந்தது ஸ்ரீமுஷ்ணத்துக்கு அருகில் உள்ள காவனூர் என்று எழுத முற்படும்போது, முதுகுக்குப் பின் நின்று, ‘அது முஷ்ணம் இல்லை... திருமுட்டம் என்று திருத்தி எழுது’ என்கிற கனிவான, அதே நேரம் மிக உறுதியான நன்னனின் குரல் எனக்குள் கேட்கிறது.

எனக்கு மட்டுமல்ல, நல்ல தமிழில் உரைநடை எழுத விரும்பும் எல்லாரது மனதிலும் அவரது குரல் ஒலி கேட்கும். நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் இடம்பெறும் கட்டுரைகளில் பிழையான தமிழ்ச் சொற்களை வாசிக்க நேரிட்டால், அது குறித்து எழுதியவர்களைச் சந்திக்கும்போதோ தொலைபேசியிலோ தெரிவித்து அதை நெறிப்படுத்துவது அவரது இயல்பு.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அவரது வகுப்பறைப் பாடங்கள் முடிந்து தேர்வுகளும் நிறைவுற்றபோது, மயிலாடுதுறைக்கு அருகில் வடகரையில் பெரியார் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசுவதற்காக மாணவப் பருவத்திலேயே அழைக்கப்பட்டார்.

அந்த நிகழ்ச்சியின் நிறைவில் “நீ என்னுடன் வந்துவிடுகிறாயா?” என்று பெரியார் கேட்டபோது, யாருடைய அனுமதிக்காகவும் காத்திராமல் அவருடன் ஈரோட்டுக்குச் சென்றுவிட்டார். அன்றைக்கு நடக்கத் தொடங்கியவர் பெரியாரின் பாதையிலிருந்து சற்றும் விலகாமல் தனது இறுதி மூச்சு வரை தொடர்ந்தார். ஈரோட்டில் ‘குடியரசு’ பத்திரிகையில் பணியாற்றியவர், பின்னர் ஆசிரியர் பணிக்கு மாற வேண்டிய சூழல் வந்தது.

அதற்குப் பின்னர், பேராசிரியர் பணி தொடங்கி தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் பதவி வரை அவரது தமிழ்த் தொண்டு தளராது தொடர்ந்தது. நன்னன் எழுதியுள்ள 70-க்கும் மேற்பட்ட நூல்கள் பெரும்பாலும் தமிழியல் அல்லது பெரியாரியல் சார்ந்ததே. தமிழ்ச் சொற்களின் வேர்ச்சொல் ஆய்வு, அறிவியல் சொற்களுக்கு இணையான கலைச்சொற்களை உருவாக்குதல் ஆகிய அவரது பணிகள் இன்றைய படைப்பாளிகளுக்கு ஆகச் சிறந்த வழிகாட்டிகள்.

‘எளிய மக்கள் அறியாத சொற்களாயிற்றே’ என்று தயங்கினால், அவர் எப்போதும் அதனை மறுப்பார். “பள்ளத்தில் இருப்பவர்களை மேலேற்றிவிட வேண்டும் என்றால், நீங்கள் கைகொடுத்துத் தூக்கிவிடுவீர்களா அல்லது பள்ளத்துக்குள் குதிப்பீர்களா’ என்பதுதான் அவரது எதிர்க் கேள்வியாக இருக்கும். அப்படியான சமாதானங்களை அவர் ஒருபோதும் ஏற்பதில்லை.

‘நன்னன் குடி அமைப்’பின் சார்பாக ஆண்டுதோறும் இலக்கியப் போட்டிகள், மாணவர்களுக்கான தமிழறிவை வளர்க்கும் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி ஆகியவற்றை நடத்திப் பரிசுகள் அளித்து ஊக்குவிப்பதைத் தொடர்ந்து செயல்படுத்திவந்தார். இப்போதும் அவரது மகள்கள் வேண்மாள், அவ்வை ஆகிய இருவரும் அவரது நினைவாக ஒவ்வோர் ஆண்டும் நன்னன் பிறந்த நாளான ஜூலை 30இல் போட்டிகளை நடத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

நன்னன் மறைந்த அன்று இறுதி ஊர்வலத்தில் அவரது துணைவியார் பார்வதி அம்மாளும் கூடவே இடுகாடு வரை வந்து, அவரது கைகளைப் பற்றி “திருமணத்தின்போது நீங்கள் சொன்னது போலவே உங்கள் கரங்களைப் பிடித்துக்கொண்டு உங்கள் கொள்கையின் பொருட்டு பெரியார் வழியில் இதோ தொடர்ந்து வந்துவிட்டோம்” என்று கண்கலங்கிய தருணத்தில் அங்கிருந்தவர்களும் நெகிழ்ந்தனர்.

அவரது மகள்கள் இருவரும் தமிழியல் பணியிலும் பெரியாரின் சிந்தனைகளைப் பரப்பும் நோக்கிலும் நாள்தோறும் நன்னனின் சொல் துலக்கங்கள், பெரியாரின் கொள்கை விளக்கக் காணொளிகளைப் பதிவிடுகிறார்கள். அடுத்த தலைமுறைக்கும் தன்னுடைய கொள்கைகளை அவர்கள் உளமாற ஏற்கும் அளவுக்குத் தனது வாழ்க்கை முறையை உறுதியாகக் கடைப்பிடித்தவர் நன்னன்.

திருஞானசம்பந்தம் என்கிற தனது இயற்பெயரைத் தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக நன்னன் என்று மாற்றிக்கொண்டார். மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனார் ‘பேரிசை நன்னன் பெறும்பெயர் நன்னாட’ என்கிற வரிகளில் மதுரையின் முதல் யாமம் எப்படிக் கழிந்தது என்பதைப் பற்றி வர்ணிக்கையில் தன்னுடைய வள்ளல் தன்மையால் புகழ்பெற்ற நன்னன் என்னும் மன்னனின் பிறந்த நாளின்போது அவன் மீது அன்பு கொண்ட மக்கள் தெருக்களில் அவனைக் கொண்டாடி ஆர்ப்பரிப்பதுபோல மதுரையின் முதல் யாமம் ஆர்ப்பரித்துக் கழிந்தது என்று பாடியிருப்பார்.

பேராசிரியர் நன்னன் பெயரைச் சொல்லும் தருணத்தில் நம்மை அறியாமல் சொல் பற்றிய தேடலும் அது குறித்த துலக்கமும் நம்முள் எழுந்து நம்மை ஒழுங்கு செய்கிறது எனில், அது நன்னன் கற்றுத்தந்த தமிழின் ஆர்ப்பரிப்புதான்.

- தொடர்புக்கு: sbharathikumar@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in