

சென்னை மேற்கு மாம்பலத்தில் செயல்படும் பிவிஎஸ்என் மூர்த்தி சிறப்பு குழந்தைகள் மையத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிக் குழந்தைகள்.
சென்னை: சென்னையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் பிவிஎஸ்என் மூர்த்தி சிறப்பு குழந்தைகள் மையம், நுண்ணறிவுக் குறைபாடு மற்றும் ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளுக்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்து, அவர்களின் கல்வி மற்றும் சுயசார்பு வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி வருகிறது.
சென்னை மேற்கு மாம்பலத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக சமூகப் பணிகளுக்கு பெயர்பெற்ற பல்நோக்கு மருத்துவமனையான பொது சுகாதார மையம் (பப்ளிக் ஹெல்த் சென்டர்), மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்காக மேற்கு மாம்பலம் தம்பையா சாலையில் பிவிஎஸ்என் மூர்த்தி சிறப்பு குழந்தைகள் மையத்தை நடத்தி வருகிறது.
இந்த மையம் நுண்ணறிவுக் குறைபாடு, ஆட்சிசம் பாதிப்பு, ஹைப்பர் ஆக்டீவ், கவனக்குறைவு, டவுன் சிண்ட்ரோம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கு திறன் பயிற்சி அளித்து, 40 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது. இம்மையத்தின் முதல்வர் பத்மினி மற்றும் நிர்வாகி கணேசன் ஆகியோர் கூறியதாவது:
2011 கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 2.68 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 20.42 லட்சம் பேர். அதேபோல, 5 முதல் 19 வயதுக்குட்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளில் 61 சதவீதம் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர். 27 சதவீதம் பேர் பள்ளிக்குச் சென்றதே இல்லை.
குறிப்பாக, நுண்ணறிவுத் திறன் குறைபாடுள்ள குழந்தைகளில் 50 சதவீதம் பேர் ஒருபோதும் பள்ளிக்குச் சென்றதில்லை. பிவிஎஸ்என் மூர்த்தி சிறப்பு குழந்தைகள் மையம், ஒவ்வொரு மாற்றுத் திறனாளி குழந்தையின் திறன்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பட்ட கல்வித் திட்டங்களை வடிவமைத்து, கட்டமைக்கப்பட்ட சிறப்புக் கல்வி முறையை செயல்படுத்தி வருகிறது.
இங்கு பயிலும் குழந்தைகள் தகவல் தொடர்பு, சமூக மற்றும் நடத்தை சார்ந்த திறன்களை மேம்படுத்திக் கொள்கின்றனர். அதேபோல, கழிப்பறை பயிற்சி, சுய கவனிப்பு, அன்றாட பழக்கவழக்க மேலாண்மை போன்ற அத்தியாவசிய வாழ்க்கைத் திறன்களும் கற்பிக்கப்படுகின்றன.
மேலும், தேசிய திறந்தவெளி பள்ளி நிறுவனத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதுடன், எதிர்காலத்தில் அவர்கள் சுயசார்புடன் வாழ உதவும் வகையில் தொழிற்கல்விப் பயிற்சிகளுக்கும் வழிவகை செய்யப்படுகிறது. இங்கு பயிலும் மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் நீண்டகால சவால்களைக் குறைக்க, ஆரம்பகாலத்தில் இருந்தே தொடர்ச்சியான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், இக்குழந்தைகளுக்கு அரசு சலுகைகள் மற்றும் உரிமைகளைப் பெறவும் உதவுகிறோம். தற்போது இந்த மையத்தில் 58 குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இடவசதிப் பற்றாக்குறையால் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை சேர்க்க இயலாவிட்டாலும், சேவை மனப்பான்மையுடன் கட்டணமின்றி வழிகாட்டுதல் மற்றும் தொழில்முறை உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.