

பெங்களூரு: பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள ராமேஷ்வரம் கஃபே ஓட்டலில் ஒரு பிளேட் இட்லி ரூ.315-க்கு விற்கப்படுவது ஏன் என்று பயணி ஒருவர் இணையத்தில் கேள்வி எழுப்பினார்.
பெங்களூருவை சேர்ந்த பயணி ரெட்டிட் சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்து பதிவொன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ராமேஷ்வரம் கஃபே ஓட்டலில் ஒரு பிளேட் நெய் பொடி இட்லி சாப்பிட்டேன். அதன் விலை ரூ.315. ஏன் இவ்வளவு அதிக விலை?
பெங்களூரு மாநகரத்தில் விற்கப்படுவதைவிட நான்கு மடங்கு கூடுதலான விலையில் உணவுப் பொருட்கள் விற்கப்படுகின்றன ? இந்த மோசடி தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
விமான நிலையங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய ஏதேனும் அமைப்பு உள்ளதா ? பயணிகள் இது குறித்து முறையிட வாய்ப்பு இருக்கிறதா ? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில், ஏராளமானோர் ராமேஷ்வரம் கஃபே ஓட்டலை விமர்சித்துள்ளனர். இந்தப் பகல் கொள்ளையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.