Published : 21 May 2023 04:13 AM
Last Updated : 21 May 2023 04:13 AM

மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூரில் ரூ.33 கோடியில் அருங்காட்சியகம் - ஜூனில் அடிக்கல் நாட்டு விழா

ஆதிச்சநல்லூரில் அமையவுள்ல உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தின் மாதிரி வடிவம். படம்: என்.ராஜேஷ்.

தூத்துக்குடி: ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை ஜூன் முதல் வாரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார்.

ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் மாநில அரசு சார்பில் ஆய்வு செய்து கிடைத்த பொருட்களை திருநெல்வேலியில் அமையவுள்ள பொருநை அருங்காட்சியகம் மூலமாக காட்சிப்படுத்த உள்ளனர். இதற்காக ரூ.33.02 கோடி செலவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் அடிக்கல் நாட்டினார். இதற்கான விழா கடந்த 18-ம் தேதி நடந்தது.

இதே போல், மத்திய அரசு தொல்லியல் துறை மூலமாக ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான இடம் தேர்வு உட்பட பல்வேறு பணிகள் நிறைவடைந்துள்ளன. அந்த இடத்தில் அருங்காட்சியகம் அமைத்து உலகம் முழுவதும் உள்ள ஆதிச்சநல்லூர் பொருட்களை மீட்டு வந்து இங்கு வைக்க திட்டமிட்டுள்ளனர்.

மேலும் ஆதிச்சநல்லூர் ஏ, பி, சி சைட் என 3 இடங்களில் அகழாய்வு செய்து அந்த இடங்களில் உள்ளதை உள்ளபடியே சைட் மியூசியம் அமைக்கும் பணியும் உலகத்தரத்தில் நடைபெறவுள்ளது. இந்த பணியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூன் முதல் வாரத்தில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார்.

இதற்காக மத்திய அமைச்சர் வருகை தரும் இடம். மேலும், மேடை அமையும் இடம், அடிக்கல் நாட்டும் இடம் உட்பட இடங்களை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் பார்வையிட்டார். அவருக்கு மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் விளக்கமளித்தார்.

அருங்காட்சியகம் அமைய உள்ள பணிகள் குறித்தும், தொல்லியல் துறையினருடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். அதன் பின் அவர் ஆதிச்சநல்லூர் பரம்பில் ‘பி’ சைட் என்ற இடத்துக்கு வந்தார். அங்கு ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் தோண்டப்பட்ட குழிகள் மேல் கண்ணாடி மூலம் அமைய உள்ள சைட் மியூசியத்தை நேரில் பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

அதன்பின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலமாக வெளியிடப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட வரலாறு நூலை அருண்ராஜ், மாவட்ட ஆட்சியரிடம் அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் நூலின் ஆசிரியரும், தொல்லியல் துறை அலுவலருமான யதீஸ்குமார், தொல்லியல் ஆய்வாளர் அறவாழி, வட்டாட்சியர் சிவகுமார், ஆறாம்பண்ணை ஊராட்சி தலைவர் சேக் அப்துல்காதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x