

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உயிரிழந்த மகன் நினைவாக தந்தை ஒருவர் அரசு தொடக்கப் பள்ளிக்கு ரூ.11 லட்சத்தில் வகுப்பறை கட்டிக் கொடுத்துள்ளார்.
சாத்தூர் அருகே உள்ள தொம்பக்குளத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகன் ராம்கௌதம். பட்டப்படிப்பு முடித்து அமெரிக்காவில் ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது சிக்கிக்கொண்ட நண்பரை காப்பாற்ற முயன்றபோது ராம்கௌதம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில், ராம்கௌதம் நினைவாக அவரது தந்தை அர்ஜுனன் சாத்தூர் தொம்பக்குளம் ஊராட்சி ஒன்றி அரசு தொடக்கப் பள்ளிக்கு ரூ.11 லட்சத்தில் வகுப்பறை ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார். இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சாத்தூர் எம்.எல்.ஏ.ரகுராமன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் பங்கேற்று தலைமை வகித்து வகுப்பறைக் கட்டிடத்தைத் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில், கல்வி அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.