சிவகங்கை | மின்சார வசதியின்றி தவிக்கும் 26 கழைக்கூத்தாடி குடும்பங்கள்: மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கும் குழந்தைகள்

சிவகங்கை | மின்சார வசதியின்றி தவிக்கும் 26 கழைக்கூத்தாடி குடும்பங்கள்: மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கும் குழந்தைகள்
Updated on
1 min read

சிவகங்கை: சிங்கம்புணரி அருகே மின்சார வசதியின்றி 26 கழைக்கூத்தாடி குடும்பங்கள் தவித்து வருகின்றன. அங்குள்ள குழந்தைகள் இரவில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கின்றனர்.

சிங்கம்புணரி அருகே கோட்டை வேங்கைப்பட்டியில் 20 ஆண்டுகளாக 26 கழைக்கூத்தாடி குடும்பங்கள் வசித்து வந்தன. இதையடுத்து 4 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களுக்கு எஸ்.மாம்பட்டி பகுதியில் தலா 2.5 சென்ட் இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது.

ஆனால், வீடுகள் இல்லாததால் அவர்கள் அங்கு கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர். மேலும் அவர்களது குழந்தைகள் எஸ்.மாம்பட்டி அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

தொடர்ந்து அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி முயற்சியால் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு வழங்கப் பட்ட இடத்தில் இதுவரை மின்சாரம், கழிப்பறை, சாலை வசதி செய்து கொடுக்கப்படவில்லை.

4 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாததால் இரவு நேரங்களில் அங்குள்ள குழந்தைகள் மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் படித்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் தெருக்களில் நடமாட முடியாமல் கூடாரத்திலேயே முடங்கி இருக்கும் நிலை உள்ளது. கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள் சிரமப்படுகின்றனர்.

இதையடுத்து தங்களுக்கு மின்சாரம், கழிப்பறை, சாலை வசதி செய்துதர வேண்டும் என கழைக்கூத்தாடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in