60,000 கி.மீ பயணம்... 4 ஆண்டுகளாக இரு சக்கர வாகனத்தில் ஆன்மிக சுற்றுலா செல்லும் தாய், மகன்!

60,000 கி.மீ பயணம்... 4 ஆண்டுகளாக இரு சக்கர வாகனத்தில் ஆன்மிக சுற்றுலா செல்லும் தாய், மகன்!
Updated on
2 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: 2018-ம் ஆண்டு முதல் இரு சக்கர வாகனத்தில் ஆன்மிகச் சுற்றுலா செல்லும் கர்நாடக மாநிலம் மைசூரு பகுதியைச் சேர்ந்த தாய், மகன் இருவரும் 60,450 கிலோ மீட்டர் பயணத்திற்கு பின் திங்கள்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்தனர்.

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே போகாதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(45). இவரது தாய் ரத்தினம்மா (74). இவரது தந்தை தட்சிணாமூர்த்தி பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றியவர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அதிலிருந்து ரத்தினம்மா மன அழுத்தத்தில் இருந்ததால், அவரை ஆன்மிக தலங்களுக்கு அழைத்து செல்ல கிருஷ்ணகுமார் திட்டமிட்டார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில் தனது தாயுடன் தரிசனம் செய்ய பைக்கில் வந்த கிருஷ்ணகுமார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில் தனது தாயுடன் தரிசனம் செய்ய பைக்கில் வந்த கிருஷ்ணகுமார்.

கடந்த 2018-ம் ஆண்டு தனது தந்தை பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தில் கிருஷ்ணகுமார் தனது தாய் ரத்தினம்மாளுடன் ஆன்மிக பயணத்தை தொடங்கினார். ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், கோவா புதுச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்குச் சென்று வழிபாடு நடத்தினர். இதுவரை 60,459 கிலோமீட்டர் தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்து திங்கள்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதுகுறித்து கிருஷ்ணகுமார், தாய் ரத்தினம்மா கூறுகையில், ''2018-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 60,459 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து இந்தியாவில் உள்ள பல்வேறு ஆன்மிக தலங்களில் வழிபாடு செய்துள்ளோம். தமிழகத்தில் உள்ள புராதன சிறப்பு மிக்க கோயில்களில் தரிசனம் செய்தது மன அமைதியை அளித்தது. தொடர்ந்து இங்கிருந்து ராமேஸ்வரம் சென்று காசியில் இருந்து எடுத்து வந்த கங்கை தீர்த்தத்தை ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்த பின் அடுத்த மாதம் மைசூர் திரும்ப உள்ளோம்'' என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in