Published : 04 Sep 2022 10:42 AM
Last Updated : 04 Sep 2022 10:42 AM

இலக்கு இல்லையெனில் வெற்றி வந்தடையாது: மாணவர்களுக்கு எழுத்தாளர் சேத்தன் பகத் அறிவுறுத்தல்

எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் 25-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 'டிரான்ஸ்பார்மிங் இந்தியா' என்ற தலைப்பில் கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள எஸ்எஸ்விஎம் பள்ளியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் 'இன்ஸ்பிரேஷனல் குரு' விருது பெற்ற ஆசிரியர் அஞ்சனா சுதாகரன். உடன், (இடமிருந்து) எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் மோகன்தாஸ், எழுத்தாளர் சேத்தன் பகத், எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர், நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன், இயக்குநர்கள் (கல்விபுலம்) ஷா மோகன்தாஸ், நிதின் ஆகியோர்.

எந்த இலக்கும் இல்லையெனில் வெற்றி உங்களை வந்தடையாது என எழுத்தாளர் சேத்தன் பகத் தெரிவித்தார்.

எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் 25-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘டிரான்ஸ்பார்மிங் இந்தியா' என்ற தலைப்பில் கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள எஸ்எஸ்விஎம் பள்ளியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் எழுத்தாளர் சேத்தன் பகத் மாணவர்களிடையே பேசியதாவது:

உங்களைச் சுற்றி 100 விஷயங்கள் நடந்துகொண்டிருக்கும். அவற்றில், எதில் கவனம் செலுத்த வேண்டும். எதை புறந்தள்ள வேண்டும் என்ற திறனை மூளை பெற்றுள்ளது. எனவே, நம்மைச்சுற்றி பல விஷயங்கள் நடந்தாலும், அதில் கவனம் செலுத்தும்போதுதான் நாம் அதைப் பார்க்கிறோம்.

உங்கள் கவனம் எங்கு செல்கிறதோ அங்குதான் உங்கள் ஆற்றலும் செல்லும். அதுதான் உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும்.

திட்டமிட்டு திசைதிருப்புகின்றன: பல்வேறு நிறுவனங்கள் கோடிக்கணக்கில் செலவழித்து சமூக வலைதளங்களில் உங்கள் கவனத்தை திசைதிருப்பி வருகின்றன.

அதற்கு நீங்கள் பலியாகிவிடக்கூடாது. நீங்கள் எவ்வளவு திறம்பட திட்டமிட்டிருந்தாலும் உங்களுக்கு தோல்வி ஏற்படலாம்.

தோல்வியை சந்திக்காமல் வெற்றியடைந்தவர் என இங்கு யாரும் இல்லை. நீங்கள் மிகப்பெரிய வெற்றியைப்பெற, மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்க வேண்டும். தோல்வி ஏற்பட்டுவிட்டது என்பதற்காக எடுத்த காரியத்தை விட்டுச் செல்வது சரியான தீர்வாக இருக்காது.

நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாமல் வெற்றியை மட்டும் பெற்று எந்த பலனும் இல்லை. கோடீஸ்வரராக இருந்தும், மகிழ்ச்சியாக இல்லாதவர்களை நான் அறிவேன். வெற்றி என்பது ஒவ்வொரு தனிநபருக்கும் வித்தியாசப்படும்.

உங்களுக்கு எந்த இலக்கும் இல்லையெனில், வெற்றி உங்களை வந்தடையாது. இதை பலரும் மறந்துவிடுகின்றனர். இலக்கு என்பதற்கு அளவும், நேரமும் இருக்க வேண்டும். இல்லையெனில் அது இலக்காக இருக்க முடியாது. அது கனவாகத்தான் இருக்க முடியும்.

பணக்காரர் ஆக வேண்டும் என்பது கனவு. ஆனால், நான் 30 வயதாகும் போது மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்க வேண்டும் என்பது இலக்கு. நீண்ட கால உழைப்புக்குப் பிறகு நீங்கள் அடையும் வெற்றிக்குதான் அதிக மதிப்பிருக்கும். எனவே, நீண்ட காலம் உழையுங்கள்.

உங்கள் இலக்குக்கான, ஏதேனும் ஒரு விஷயத்துக்கு ஒருநாளைக்கு 2 மணி நேரம் வீதம் ஒதுக்கி, ஓராண்டுக்கு நீங்கள் உழைத்தால், நிச்சயம் எதிர்பாராத மாற்றங்கள் நிகழும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்வில், எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர், நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன், அறங்காவலர் மோகன்தாஸ், இயக்குநர்கள் (கல்வி புலம்) ஷா மோகன்தாஸ், நிதின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x