

சேலத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு, சுட்ட தேங்காய் என்றதும் சட்டென நினைவிற்கு வருவது, தேங்காய்க்கு என நடத்தப்படும் தேங்காய் சுடும் பண்டிகையே! அது சேலத்திலும், அதை ஒட்டிய பல மாவட்டங்களிலும் நடத்தப்படும் பிரபலமான விழா. இளவயது நினைவுகளைத் திரும்பவும் நேரடியாகப் பெற ஆடி மாத தொடக்க நாளில் சேலம் நோக்கி பயணமானேன்.
இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த தேங்காய்ப் பண்டிகை சார்ந்த உற்சாகம், இப்போதைய சேலத்துத் தெருக்களில் சற்று குறைந்தே இருந்தது. ஆங்காங்கே தேங்காய் விற்பனையும், தேங்காய் சுடும் குச்சிகளின் விற்பனையும் ஓரளவிற்கே நடந்துகொண்டு இருந்தது! தேங்காய் பண்டிகைக்காகப் பள்ளிகளில் கொடுக்கப்படும் அரைநாள் விடுமுறை இப்போதும் நடைமுறையில் இருக்கிறதா என்று தெரியவில்லை.
தேங்காய் சுடும் பண்டிகையை ஆத்மார்த்தமாக அனுபவிக்க, சேலம் அருகிலிருக்கும் ஒரு கிராமத்திற்குச் சென்றேன்.தேங்காய் சுடும் அனுபவம் நிறையவே இருப்பதால், இப்போதைய கிராமத்து மக்கள் செய்யும் செயல்களை உற்சாகத்துடன் கவனித்தேன்.
தேங்காய் அலங்காரம்
தேங்காயின் ஒரு கண்ணைத் துளைத்து, அதிலிருக்கும் நீரை வெளியேற்றினார்கள். தேங்காய் மேலிருக்கும் நார்களை எடுத்துவிட்டு, தேங்காய் முழுவதும் மஞ்சள் பூச்சு நடைபெற்றது. தேங்காயை மண்ணில் தேய்த்து, நாரை நீக்கும் பொறுப்பினை சிறுவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
முதலில் எள், பாசிப்பயிறு, நாட்டுவெல்லம், பச்சரிசி, அவல், பொட்டுக்கடலை போன்றவற்றை அரைத்து கலவையாக்கி தேங்காயின் துளைக்குள் செலுத்தினார்கள். அதன் பின்னர் சிறிதளவு தேங்காய் நீரும் அதில் சேர்க்கப்பட்டது. தேங்காயினுள் முக்கால் பாகம் மேற்சொன்ன கலவையும், கால் பாகம் தேங்காய் நீரும் இருக்கும் விதத்தில் தேங்காய் நிரப்பப்பட்டது. தேங்காய்க்குள் நிரப்பப்படும் கலவையை நன்றாக வேக வைப்பதற்கே தேங்காய் நீர் இங்கே சேர்க்கப்படுகிறது.
ஒரு நீளமான குச்சியைத் தேர்ந்தெடுத்து, அது துளைக்குள் பொருந்துமாறு ஒரு முனையைச் சீவி, தேங்காயுடன் இணைத்தார்கள். குச்சிகளுக்கும் மஞ்சள் அலங்காரம் நடைபெற்றது. கிராமங்களில் பொதுவாக அழிஞ்சில் குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. சில நேரங்களில் வாதநாரயணன் குச்சிகளும் தேவைக்கேற்ப தேர்ந்தெடுக்கப்படுகின்றன. எதுவும் கிடைக்காத பட்சத்தில் மற்ற மரங்களின் குச்சிகளும் பயன்படுத்தப்படும்.
தீ மூட்டிக் கொண்டாட்டம்
பொதுவான ஒரு இடத்தில் சிறிய குழியைத் தோண்டினார்கள். அதற்குள் காய்ந்த குச்சிகள், சருகுகள், காகிதங்கள் போன்றவற்றைப் போட்டு, தீ மூட்டி அதைச் சூழ்ந்து நின்றுகொண்டு, ஆரவாரத்துடன் சிறுவர்கள் தேங்காயைச் சுட ஆரம்பித்தார்கள். முற்காலத்திலிருந்தே சிறுவர்களுக்கென நடைபெறும் ‘Camp fire’ நிகழ்வாக இதை வைத்துக்கொள்ளலாம். குச்சியிலிருந்து தேங்காய் நழுவி விழுந்துவிடாமல் இருக்க, கையாளப்பட வேண்டிய பல நுணுக்கங்களைச் சுற்றி இருக்கும் பெரியவர்கள் தெரிவித்துக் கொண்டே இருந்தார்கள்.
சிறிது நேரத்தில் உள்ளிருக்கும் பொருட்களும் தேங்காயும் நன்றாக வெந்ததைத் தெரிவிக்கும் வகையில், தேங்காயின் ஓடு கருகுவதுடன் லேசாகத் தீப்பிடிக்கவும் தொடங்கின. தேங்காய் ஓட்டில் வெடிப்புகள் உண்டாவதும் தேங்காய் முழுவதுமாக வெந்துவிட்டதற்கான அறிகுறி தான். தேங்காயின் அனைத்து பகுதிகளும் தீயில் படும்படி, குச்சியின் உதவிக்கொண்டு தேங்காயைச் சுழற்றிக்கொண்டே இருந்தார்கள். சில நேரங்களில் தீயில் வேகும் போதே, குச்சியைவிட்டு நழுவி தேங்காய் உருண்டோடியதைப் பிடிக்கச் சிறுவர்கள் பின்தொடர்ந்தது சுவாரஸ்யமாக இருந்தது. தேங்காயில் நடக்கும் மாற்றங்களைக் கவனிக்கும் சிறுவர்கள் எழுப்பிய ’ஆஹா… ஓஹோ…’ ஒலி உற்சாகத்தை அதிகரித்தது.
நெருப்பிலிருந்து எடுத்து தனியாக வைத்தவுடன், உள்ளிருக்கும் பொருட்களின் மணத்தோடு சேர்ந்து தேங்காயின் மணமும் தீயின் வெப்பத்தோடு அற்புதமான வாசனையைக் கொடுத்தது. சூடு ஆறியதும் விருப்பக் கடவுளுக்குப் படையல் பொருளாக அது பரிமாறப்பட்டது. அதன்பின் சுடப்பட்ட தேங்காய் பங்கிடப்பட்டு சுற்றமுள்ள அனைத்து வீடுகளுக்குள்ளும் மணமிக்க பிரசாதமாக நுழைந்தது. உள்ளிருக்கும் எள், பாசிப்பயிறு, நாட்டுவெல்லம், அவல், பொட்டுக்கடலை ஆகியவற்றுடன் தேங்காயின் சுவையும் சேரும்போது உண்டாகும் இனிமையான சுவைக்கு ஈடுஇணையில்லை.
மருத்துவ குணம்
இந்த ’தேங்காய் உணவு’ வயிற்றுப் புண்களை ஆற்றும். புரதக் கூறுகள் நிறைந்திருக்கும் இந்த உணவு, உடலுக்கு வலிமையைக் கொடுப்பதோடு, தேவையான நெய்ப்புத் தன்மையையும் அளிக்கும். தேங்காய் சுடுவதற்குப் பயன்படும் அழிஞ்சில் குச்சியும் மருத்துவ குணமிக்கது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. திருவிழா நாளன்று மட்டுமன்றி அவ்வப்போது சிற்றுண்டியாகவும் செய்து பிரமாதப்படுதலாம்.
குறையும் மோகம்
நெடுங்காலமாகத் தவறாமல் கொண்டாடப்பட்டு வந்த இந்த திருவிழாவின் மோகம் இப்போது குறைய ஆரம்பித்துவிட்டதை அன்று நேரடியாகப் பார்க்க முடிந்தது. பல குடும்பங்கள் குழும, சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவராலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வந்த விழா, சமீப வருடங்களில் களையிழக்கத் தொடங்கிவிட்டது. சிறுவர்களின் கூட்டம் முன்பு போல் இல்லை! சுற்றம் சூழவில்லை. இருப்பினும், தேங்காய் சுடும் நிகழ்வு தொடர்ந்து நடைபெறுகிறது என்பதில் கொஞ்சம் ஆறுதல்!
சமூக நலத்தைப் பாதுகாக்கும் விழா
நாம் கொண்டாடும் ஒவ்வொரு திருவிழாவிற்குப் பின்னும் ஒரு மருத்துவ சூட்சுமம் நிச்சயமாக உண்டு. அவ்வகையில் தேங்காய் சுடும் திருவிழாவிற்கும் மருத்துவ தொடர்பு உண்டு. இது தவறாமல் தொடரப்பட வேண்டிய குதூகலமான திருவிழா. இவை போன்ற திருவிழாக்கள் மனநலத்தையும் உடல் நலத்தையும் உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுபவை. அவ்வகையில் ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாக, தேங்காயின் மருத்துவ குணங்களை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் உருவான ’தேங்காய் சுடும் பண்டிகை’, சமூகத்தை ஒன்றிணைத்து, சமூக நலத்தைப் பாதுகாக்கும் விழா என்றால் மிகையல்ல!
வாய்ப்பும் நேரமும் இருந்தால், இன்றே உங்கள் குடும்பத்தோடு சேர்ந்து தேங்காயைச் சுட்டுச் சாப்பிட்டுப் பாருங்கள், நீங்கள் எந்த மாவட்டத்திலிருந்தாலும் சரி!
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com