Last Updated : 06 May, 2022 06:43 AM

 

Published : 06 May 2022 06:43 AM
Last Updated : 06 May 2022 06:43 AM

காட்சிப்பொருளாக கரையில் நிற்கும் படகுகள்: புதுப்பொலிவு பெறுமா நோணாங்குப்பம் படகு குழாம்?

நோணாங்குப்பம் படகு குழாமில் பழுதாகி கரையில் காட்சிப்பொருளாக நிற்கும் படகுகள்.

புதுச்சேரி: புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவர்ந் திழுக்கும் இடங்களில் முக்கிய இடத்தில் உள்ளது நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம். இங்கிருந்து இயற்கை அழகை ரசித்தபடியே, படகில் பேரடைஸ் பீச் வரை சென்று, உற்சாகமாக பொழுதை கழித்துவிட்டு திரும்புவர்.

தொடர் விடுமுறை, வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் சுற்றுலா பயணிகள் இந்த படகு குழாமுக்கு அதிகளவில் வருகை தருகின்றனர். புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின்(பிடிடிசி) கீழ் செயல்படும் இந்த படகு குழாமில், படகு சவாரி மூலம் மாதந்தோறும் ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது.

முன்பு இங்கு 30 படகுகள் வரை இயக்கப்பட்டு வந்தன. இவற்றில், தற்போது 9 படகுகளே இயங்கி வருகின்றன. 80 பேர் செல்லக்கூடிய சீ குரூஸ் படகு ஒன்று, 40 பேர் செல்லக்கூடிய இரு பாண்டோன் படகுகள், 30 பேர், 25 பேர் செல்லக்கூடிய படகுகள் தலா ஒன்று, 20 பேர் செல்லக்கூடிய படகுகள் 4 என மொத்தம் 9 படகுகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

இன்ஜின் கோளாறு, நிதி பிரச்சினை உள்ளிட்ட காரணத்தால் மற்ற படகுகள் பழுதாகி, படகு குழாமின் கரைகளில் ஏற்றி வைக்கப்பட்டு, காட்சிப்பொருளாக மாறியுள்ளன. குறிப்பாக அதிவேக படகுகள்- 4, இயந்திர படகுகள்- 4, பெடலிங் படகுகள்- 8, முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த ஜெட் ஸ்கை, கயாக், வின்ட் சர்ப், பனானா போன்ற நீர்விளையாட்டு படகுகளும் கவனிப்பாரற்று கிடக்கின்றன.

இது குறித்து படகு குழாம் தரப்பில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்: கடந்த காலங்களில் படகில் சிறிய பழுது ஏற்படும் போது அவற்றை சரி செய்ய நிதி கேட்டால், உடனடியாக ஒப்புதல் அளித்து நிதி கொடுக்கவில்லை. இப்படி சிறிய அளவில் பழுதாகி நின்ற படகுகள், அப்படியே விடப்பட்டதால் தற்போது லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டியது உள்ளது. இருக்கும் நிதி நெருக் கடியில் அவ்வளவு நிதி ஒதுக்க இயலாது என்று கூறப்படுவதால் பழுதான படகுகள் மேலும் வீணாகிக் கொண்டே செல்கின்றன.சுற்றுலாத்துறை, பிடிடிசிக்கு என்று தனித்தனியாக அதிகாரிகள் இருப்பதால் நிதி ஒப்புதல் பெறுவதில் சிரமம் உள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறையும் உள்ளது.

பாண்டி மெரினா, புதுக்குப்பம் மணற் குன்று, வீராம்பட்டிணம் ரூபி கடற்கரை, சின்ன வீராம்பட்டிணம், ஈடன் கடற்கரை உள்ளிட்ட கடற்கரைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த படகு குழாமின் வருவாயும் சற்று குறைந்துள்ளது. போதாகுறைக்கு இந்த படகு குழாம் அருகிலேயே தனியார் படகு குழாம் ஒன்றும் அமைக்கப்பட்டு, கடந்த இரு வருடங்களாக இயங்கி வருகிறது என்று தெரிவிக்கின்றனர்.

அழகிய இயற்கை சூழ்நிலையைக் கொண்ட இந்த படகு குழாமிற்கு வருவோர், போதிய படகு வசதிகள் இல்லாததால், அதிருப்தி அடைந்து திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. படகுகளின் பற்றாக்குறையால் படகு சவாரிக்கு டிக்கெட் எடுக்க, படகில் ஏற நீண்ட வரிசையில், கோடை வெயிலில் சுற்றுலா பயணிகள் காத்திருக்கும் கொடுமையும் நடக்கிறது. இது சுற்றுலாவின் மகிழ்ச்சியை குறைத்து, சலிப்பைத் தருவதாக அமைந்து விடுகிறது.

சரியான நிர்வாக வழிகாட்டுதல் இல்லாத தால், அனைவருக்கும் பிடித்த ஒரு சுற்றுலா தலம் கொஞ்சம் கொஞ்சமாக அதன் தரத்தைஇழந்து வருகிறது. உடனே இதை சரி செய்து,புதுப்பொலிவு பெற வைக்க வேண்டும். ‘புதுச்சேரி அரசின் முக்கிய வருவாய் சுற்றுலா; அதில் நாங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்’ என்று அடிக்கடிக் சொல்லிக் கொள்ளும் அரசு, விரைவில் இதை சரி செய்யும் என்று நம்புவோம்.

அனைவருக்கும் பிடித்த ஒரு சுற்றுலா தலம் கொஞ்சம் கொஞ்சமாக அதன் தரத்தைஇழந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x