Published : 26 Mar 2022 06:14 AM
Last Updated : 26 Mar 2022 06:14 AM

வாட்டர் பாட்டில் முதல் பிரிட்ஜ் வரை: கோடை வெப்பத்தைத் தணிக்கும் மண்பாண்டப் பொருட்கள் விற்பனை உயர்வு

ஈரோட்டில், கோடை வெப்பத்தைத் தணிக்க விற்பனைக்கு தயாராக உள்ள குழாய் இணைக்கப்பட்ட மண் பானைகள்.

ஈரோடு: கோடையின் கொடுமையில் இருந்து தப்பிக்க இளநீர், தர்பூசணி, மோர், குளிர்பானங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. மறுபக்கத்தில், கோடையின் வெப்பத்தை இயற்கையாகத் தணிக்கும் தன்மை கொண்ட மண்பாண்டங்களின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

மண்பாண்டங்களின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், அதனை நாடி வருவோரும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த முகாசி அனுமன்பள்ளியைச் சேர்ந்த மண்பாண்டக் கலைஞர் கனகராஜ் கூறியதாவது;

கோடைகாலத்தில் பயன்படுத்தும் வகையில், பல்வேறு மண்பாண்டப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். ஒருமுறை பயன்படுத்தும் மண் டம்ளர்கள் ரூ.5 முதலும், டீ, காபி போன்றவை குடிக்க தொடர்ந்து பயன்படுத்தக்கூடிய மண் குவளைகள் ரூ.40 வரையிலும் விற்பனை செய்கிறோம்.

அதேபோல், ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்துச் செல்லும் மண் வாட்டர் பாட்டில் ரூ.80 முதல் ரூ.150 வரையிலும், 2 லிட்டர் நீர் பிடிக்கும் மண் ஜக் ரூ.200-க்கும், பைப் பொருத்தப்பட்ட 5 லிட்டர் முதல் 50 லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட மண்பானைகள் ரூ.100 முதல் ரூ.700 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட கேன் தண்ணீரை குடிப்பதற்கு பயன்படுத்துவோர், அந்த கேன்களை அப்படியே மேலே பொருத்தும் வகையிலான மண்ஜாடிகள் ரூ.250 முதல் ரூ.500 வரை விற்பனையாகிறது.

இவற்றுடன் இம்முறை புதிய தொழில்நுட்பத்தில், மண்ணா லான குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்) தயாரித்து விற்கிறோம். மூடியுடன் கூடிய பானை வடிவிலான இந்த பிரிட்ஜில், 5 கிலோ வரை காய்கறிகளை வைத்திருந்தால், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். அரைத்த மாவு வகைகளையும் வைக்க முடியும். இதன் விலை ரூ.1200 ஆகும்.

கரோனா தொற்றைத் தவிர்க்க குளிர்ந்த உணவு, நீரினை சாப்பிடக்கூடாது என்ற தகவல் பரவியதால், கடந்த இரு ஆண்டுகளாக மண்பாண்டங்களின் பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது. அதோடு மண் பாண்டம் செய்வதற்கான களிமண் எடுக்க அனுமதி பெறுவதிலும் பல்வேறு சிக்கல்கள் தொடர்கிறது. எளிதாக மண் கிடைப்பதில்லை.

மண் சட்டியில் சமைத்து சாப்பிடுங்கள் என்று மருத்துவர்களே அறிவுரை வழங்கும் அளவுக்கு தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, எங்களிடம் பல்வேறு வகையான மண்பாண்டங்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் பலர் வாங்கிச் செல்கின்றனர். மண்பாண்டக்கலையைக் காக்க வேண்டும் என்ற நோக்கோடு, பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக மண்பாண்டம், மண்ணால் பொம்மைகள் செய்வது குறித்து பயிற்சி அளித்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x