Last Updated : 24 Apr, 2025 08:21 PM

1  

Published : 24 Apr 2025 08:21 PM
Last Updated : 24 Apr 2025 08:21 PM

“அனுதாபம், ‘ஹீரோ’ இமேஜ் வேண்டாம்!” - யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த பார்வை மாற்றுத் திறனாளி கதை இது!

பார்வை மாற்றுத் திறனாளிகள் தினம் தினம் போராடிப் போராடிதான் வாழ்ந்து வருகிறார்கள். இப்படி இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கு ஓர் அரசாங்க வேலை, நல்ல சம்பளம் என்பதெல்லாம் எட்டிப்பிடிக்க முடியாத கனவுதான். இத்தகையை சூழலில், ஒன்பதாம் வகுப்பில் தனது பார்வையை இழந்த மனு கார்க் (23) என்ற இளைஞர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று அசாத்திய சாதனை படைத்துள்ளார்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் 23 வயதான மனு கார்க். தாயின் அரவணைப்பில்தான் வளர்ந்துள்ளார். சமீபத்தில் முடிவுகள் வெளியான யுபிஎஸ்சி தேர்வில், தேர்ச்சி பெற்று, தேசிய அளவில் 91-வது இடத்தைப் பெற்றார். இந்து கல்லூரியில் இளங்கலை படித்த அவர், ஜேஎன்யூ-வில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

சிறு வயதிலிருந்தே , சமூக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் பசுமரத்தாணி போல பதிந்திருக்கிறது. இது குறித்து அவர் பகிர்ந்தவை: “அரசு ஊழியர்கள் எவ்வாறு சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வருகிறார்கள் என்பது பற்றிய கதைகளை நான் சிறு வயதிலேயே கேட்பேன். அது எனக்கு உந்துதலாக இருந்திருக்கிறது. சிறு வயதில் இருந்தே நாட்டு நடப்பு விவகாரங்கள் மற்றும் அரசியல் சார்ந்த சம்பவங்களை அறிந்து கொள்வதில் ஆர்வத்துடன் இருப்பேன்.

நான் எட்டாம் வகுப்பில் இருந்தபோது, ​​பார்வைக் குறைபாட்டின் அறிகுறிகள் தொடங்கின. வகுப்பறையின் முன் வரிசையில் அமர்ந்திருந்தாலும், கரும்பலகையை பார்ப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஏராளமான மருத்துவமனைகளுக்கு சென்றிருக்கிறேன். ஆனால், எந்தப் பயனும் கிடைக்கவில்லை. பிறகு, விழித்திரையில் சிதைவை ஏற்படுத்தும் ஒரு அரிய மரபணு கோளாறு எனக்கு இருப்பது கண்டறியப்பட்டது.

காலப்போக்கில், இது முழுமையான பார்வை இழப்புக்கு வழிவகுத்தது. தொழில்நுட்பங்களை எனக்கு நிறைய வழிகளில் உதவியாக இருந்தது. தேர்வுக்கு தயாராவதில் சற்று சிரமங்கள் இருந்தாலும் கூட, நான் அதை சரியான முறையில் கையாண்டேன். ஆடியோ வடிவில் அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டேன்.

என்னதான் நன்றாக படித்திருந்தாலும், தேர்வு எழுதுவது மிக முக்கியமான ஒரு விஷயம். நன்றாக எழுதும் ஒருவரைக் கண்டுபிடிப்பது சவாலானது. அவர்கள் நாங்கள் கூறும் பதில்களைப் புரிந்துகொண்டு அவற்றை நாம் சொல்வது போல் சரியாக எழுத வேண்டும். முதலில் 2023-இல் யுபிஎஸ்சி தேர்வு எழுதினேன். ஆனால், தேர்ச்சி பெறமுடியவில்லை. எனது அம்மா மிகவும் உதவிகரமாக இருந்தார்.

எனது இலக்கில் மிக கவனமாக இருந்தேன். படிப்பதில் மிகவும் கவனம் செலுத்தினேன். ஒரு நாளுக்கான பாடத்திட்டத்தை முடிக்காமல் எழுந்திருக்க மாட்டேன். சில சமயங்களில் தேவைப்பட்டால் இரவு வெகுநேரம் வரை படிப்பேன். மற்ற சமயங்களில் பாடல் கேட்பது போன்ற பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுவேன்.

நான் ஐ.ஏ.எஸ்.-ல் சேர்ந்தால், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகவும், ஓரங்கட்டப்பட்ட சமூகங்களின் மேம்பாட்டிற்காகவும் பணியாற்ற விரும்புகிறேன். நாங்கள் அனுதாபத்தையோ அல்லது ஹீரோக்களைப் போல நடத்தப்படுவதையோ விரும்பவில்லை. எங்களுக்கான சம வாய்ப்பு வழங்கப்பட்டாலே போதுமானது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x