

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகழாய்வில் சுடுமண் குடுவை, சுடுமண் முத்திரை மற்றும் சங்குவளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையிலும் தோண்டப்பட்ட 18 குழிகளில் உடைந்த நிலையில் சூடு மண் உருவ பொம்மை, வட்ட சில்லு, தங்க மணி, சூது பவள மணி உட்பட 3,210 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போது இரு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த அகழாய்வில் முழு வடிவிலான சுடுமண் குடுவை, சுடுமண் முத்திரை மற்றும் அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து அகழாய்வு மைய இயக்குநர் பாஸ்கர் கூறுகையில், “நம் முன்னோர்கள் வெளியூர்களிலிருந்து சங்குகளை பெற்று வளையல்களை தயாரித்து வந்துள்ளனர்.
மேலும், கிடைக்கப்பட்ட குடுவையில் குடிநீர் அல்லது உணவுப்பொருட்கள் ஏதேனும் வைத்து பயன்படுத்தி வந்திருக்கலாம். சுடுமண் முத்திரையின் மூலம் வணிகம் செய்து வந்ததற்கான சான்று தெரிய வருகிறது. மேலும், அலங்காரம் செய்யப்பட்டுள்ள வளையல்கள் கிடைத்துள்ளதால் இப்பகுதியில் வசித்த முன்னோர்கள் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதையும் அறியமுடிகிறது” எனத் தெரிவித்தார்.