

சென்னை: திருப்பதி லட்டு விவகாரம் இந்துக்களின் ஆழ்மனதில் ஆழமான காயத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அதில் இருந்து விடுபட்டு மன அமைதி பெற, பிராணாயாமம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: திருப்பதி லட்டு செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் இருந்தது என்பதை அறிந்து மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இதில்இருந்து அவர்கள் விடுபட வேண்டும். அவர்கள் மனது அமைதி பெற வேண்டும்.
தினமும் காலையில் 5 அல்லது 10 நிமிடங்கள் முறைப்படி பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்ய வேண்டும். மூச்சை உள்ளிழுத்து, வெளிவிடும்போது மனது அமைதி பெறும். ஒரு பாத்திரத்தில் நீர் வைத்துக் கொண்டு, வலது கையால் அதை மூடிக் கொண்டு, ‘ஓம் ஆப புனந்து பிருத்துவீம்’ எனத் தொடங்கும் ப்ராசன மந்திரத்தை கூறிவிட்டு, அந்த நீரை அருந்த வேண்டும். இந்த நீரால் அனைத்தும் தூய்மை அடையட்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
அதன்பிறகும் தேவை என்றால் ‘பவமான சூக்தம்’ எனும் மந்திரம் வாயிலாகவும் மனதை அமைதிப்படுத்திக் கொள்ளலாம். அன்பால் அனைத்தும் பரிசுத்தமாகட்டும். மக்கள் அனைவரும் இந்த வேதனையில் இருந்து வெளிவர அனைத்தும் வல்ல இறைவன் துணை புரியட்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.