‘சென்னானூர் அகழாய்வில் 4,000 ஆண்டு பழமையான புதிய கற்கால வெட்டுக்கருவி கண்டெடுப்பு’

‘சென்னானூர் அகழாய்வில் 4,000 ஆண்டு பழமையான புதிய கற்கால வெட்டுக்கருவி கண்டெடுப்பு’
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: சொன்னானூரில் நடைபெற்றும் அகழாய்வில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான புதிய கற்கால வெட்டுக்கருவி கண்டறியப்பட்டுள்ளதாக அகழாய்வு இயக்குநர் பரந்தாமன் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் சென்னானுார் மலையடிவாரம் அருகே, 20 ஏக்கர் பரப்பளவில் பழங்காலப் பானையோடுகள் அதிகம் கிடைத்துள்ளன. இப்பகுதி அண்மையில் தமிழக அரசு அகழாய்வு மேற்கொண்ட மயிலாடும்பாறையைப் போன்றுள்ளது. இங்கும், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண்கற்கருவிகள் தொடங்கி, உடைந்த புதிய கற்கால கைக்கோடரிகள், இரும்புக் காலத்தை சேர்ந்த கருப்பு சிவப்பு பானையோடுகள், இரும்புக் கழிவுகள், பாறை ஓவியங்கள் என வரலாற்றுக்கு முற்பட்ட கால எச்சங்களோடு, வரலாற்றுக் காலத்தின் தொடக்கமான சங்க காலத்தைச் சேர்ந்த செங்கற்கள் கிடைத்துள்ளன.

இப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் பக்கம் முழுவதும், 100 பழங்கால செங்கற்களைக் கொண்டு சமீபத்தில் சுவர் எழுப்பியுள்ளனர். நிலத்தின் அடியிலும் இந்த செங்கற்கள் வரிசையாக இருப்பதாக ஊர் மக்கள் கூறினர். இந்த செங்கற்கள், 2,000 ஆண்டுகள் பழமையானது. இதன் மூலம் இந்த இடம் சங்ககால மக்களின் வாழ்விடமாக இருக்கக்கூடும் என்பதால் தற்போது அகழாய்வுப் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று 53 செ.மீ., ஆழ அகழாய்வுக்குழியில், உடைந்த புதிய கற்கால கருவி ஒன்று கிடைத்துள்ளது.

இது குறித்து சென்னானுார் அகழாய்வு இயக்குநர் பரந்தாமன் கூறியதாவது: ''சென்னானுார் அகழாய்வு கடந்த 6 நாட்களாக நடந்து வருகிறது. இதில், பி2 என்னும் அகழாய்வுக் குழியில் 53 செ.மீ., ஆழத்தில் உடைந்த புதிய கற்கால வெட்டுக்கருவி ஒன்று கிடைத்துள்ளது. இக்கருவியின் நீளம் 6 செ.மீட்டரும், அகலம், 4 செ.மீட்டரும் உள்ளது. இக்கருவி 4,000 ஆண்டுகள் பழமையானது.

புதிய கற்காலத்தில்தான் முதன் முதலில் விவசாயம் தொடங்கினர். அப்போது விவசாயத்திற்கு 30 முதல் 25 செ.மீ., நிளமுள்ள கற்கருவியைத்தான் பயன்படுத்தினர். இக்கருவி சிறியது என்பதால், மரங்கள் மற்றும் இறைச்சியை வெட்டவும், வேட்டையாடவும் கோடாரியைப் போன்றே இதை மனிதன் பயன்படுத்தியுள்ளான்.'' இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in