Published : 26 Apr 2024 04:06 AM
Last Updated : 26 Apr 2024 04:06 AM

சிநேகா தற்கொலை தடுப்பு நிறுவனம் சார்பில் ‘தற்கொலைக்கு பிறகு ஆதரவு’ திட்டம் தொடக்கம்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: தற்கொலை உணர்வால் பாதிக்கப்பட்டவர்களை அந்த எண்ணத்தில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் சிநேகா தற்கொலை தடுப்பு நிறுவனம் சென்னையில் 38 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், நெருக்கமான ஒருவரை தற்கொலை மூலமாக இழந்தவர்களுக்கும், தற்கொலை எண்ணம் வராமல் தடுக்க இந்த நிறுவனம் சார்பில், ‘எஸ்ஏஎஸ்’ எனப்படும் ‘தற்கொலைக்கு பிறகு ஆதரவு’என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சிநேகா தற்கொலை தடுப்பு நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் லட்சுமி விஜயகுமார், தலைவர் நல்லி குப்புசாமி, இயக்குநர் எம்.சி.ஆனந்த் ஆகியோா் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தனர்.

அப்போது டாக்டர் லட்சுமி விஜயகுமார் பேசியதாவது: இந்தியாவில் தான் தற்கொலைகள் அதிகம் நடக்கின்றன. குறிப்பாக, தென் மாநிலங்களில் மிக அதிகமாகப் பதிவாகிறது. தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் 2022-ம் ஆண்டின் புள்ளி விவரப்படி இந்தியாவில் 1,70,924 பேர் தற்கொலை மூலம் உயிரிழந்துள்ளனர். நாள் ஒன்றுக்கு சுமார் 450 பேர் இந்தியாவில் தற்கொலையால் உயிரிழக்கின்றனர். சென்னை மற்றும் தமிழகத்தின் தற்கொலை விகிதம் 18.5 மற்றும் 25.9 சதவீதமாக உள்ளது.

அதுமட்டுமில்லாமல், ஒருவரின் தற்கொலை இழப்பின் காரணமாக குறைந்த பட்சம் 7 பேர் நேர்முக மாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கப் படுகின்றனர். அந்த வகையில், தனக்கு நெருக்கமான ஒரு நபரை தற்கொலை மூலமாக இழந்தவர்கள் மன அழுத்தம், இழப்பு, தனிமை, அதிர்ச்சி, குழப்பம், துயரம், அவமானம் போன்ற உணர்வுகளால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், அவர்களுக்கும் தற்கொலை எண்ணம் வர வாய்ப்புள்ளது.

எனவே, அவர்களுக்கு அந்தஎண்ணம் வராமல் தடுக்க தற்போது,‘எஸ்ஏஎஸ்’ எனப்படும் ‘தற்கொலைக்கு பிறகு ஆதரவு’ என்ற திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்டவர்களை குழு அமர்வுகள், ஆன்லைன் அமர்வுகள் மூலம் அத்தகைய எண்ணத்தில் இருந்து விடுபட இத்திட்டம் உதவுகிறது. தங்கள் துக்கம் மற்றும் வலிகளைஅவர்களுக்கே உரிய தனித்துவமான வழியில் புரிந்துகொண்டு, வாழ்க்கையை ஆக்கப்பூர்வமாக கடந்து செல்ல ‘சிநேகா - எஸ்ஏஎஸ்’ திட்டம் உதவ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

எனவே, தற்கொலையால், நெருக்கமானவர்களை இழந்த நபர்கள், மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உணர்வுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் www.sas.snehaindia.org என்ற இணையதளம் மூலமாகவும், sas@snehaindia.org என்ற மின்னஞ்சல், 9445120050 தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு உதவி பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x