Published : 17 Jan 2024 04:02 AM
Last Updated : 17 Jan 2024 04:02 AM

திருச்செங்கோட்டில் சேவல் பிடிக்கும் ஜல்லிக்கட்டு போட்டி: பெண்கள், சிறுமிகள் ஆர்வமுடன் பங்கேற்பு

நாமக்கல்: பொங்கல் பண்டிகை யை முன்னிட்டு, திருச்செங்கோட்டில் சேவல் பிடிக்கும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்செங்கோடு நந்தவன தெருவில் ஆண்டுதோறும் நவீன ஜல்லிக்கட்டு எனும் பெயரில் பெண்கள், சிறுமிகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இதில், சேவலின் ஒரு காலில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றின் மறுமுனை போட்டியில் பங்கேற்கும் போட்டியாளரின் காலில் கட்டப்படும். மேலும், போட்டியாளரின் கண்கள் துணியால் கட்டப்படும். ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் சேவல் மற்றும் போட்டியாளரும் விடப்படுவர். வட்டத்துக்குள் சேவலைப் பிடிக்கும் போட்டி யாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

இதன்படி, இந்தாண்டுக்கான போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் சிறுமிகள் உற்சாகமாகப் பங்கேற்று விளையாடினர். போட்டியின் போது, சேவலைப் பிடிக்க முடியாமல் வட்டத்துக்குள் இருந்து வெளியில் வந்தவர்கள் மற்றும் கடைசி வரை வட்டத்துக்குள் நின்றபோதும், சேவலைப் பிடிக்க முடியாதவர்கள் என பலரின் விளையாட்டுகள் வேடிக்கையை ஏற்படுத்தியதோடு, பார்வையாளர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. சேவலைப் பிடித்தவர்களுக்கு விழாக் குழு சார்பில், பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இது தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரியமாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்க முடியும். மேலும், இதற்காக மாடுபிடி வீரர்கள் பயிற்சி எடுக்க வேண்டும். பெண்கள் மற்றும் சிறுமிகளை உற்சாகப் படுத்த வேண்டும் என்பதற்காக சேவல் பிடிக்கும் ஜல்லிக்கட்டை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். இது பெண்களிடம் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை வேடிக்கை பார்க்க அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். போட்டியாளர்களின் கண்கள் கட்டப்பட்டிருப்பதால், வட்டத்துக்கு அவர்கள் சேவலைப் பிடிக்க முயலும் முயற்சி பல வேடிக்கைகளை ஏற்படுத்தும். இதைப் பார்வையாளர்கள் சிரிப்புடன் கண்டு ரசிப்பார்கள். வெற்றி பெற்றவர்கள் பரிசு பெற்று மகிழ்வுடன் செல்வர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x