Published : 08 Aug 2023 04:08 PM
Last Updated : 08 Aug 2023 04:08 PM

50 ஆண்டுகளாக தினமும் 8 கி.மீ. சைக்கிளில் பயணிக்கும் 75 வயது மதுரை இளைஞர்!

கடைக்குத் தேவையான பொருட்களை சைக்கிளில் வாங்கிக் கொண்டு செல்லும் தர்மர்

மதுரை: வியர்வை சிந்தாமல், சிரமப்படாமல் சம்பாதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் உள்ள நிலையில், தினமும் 8 கி.மீ. சைக்கிளில் பயணித்து தனது கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் 75 வயது முதியவர் ஒருவர்.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பி.முத்துலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மர் (75). கடந்த 57 ஆண்டுகளாக பலசரக்குக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள். அனைவரும் திருமணம் முடிந்து வெளியூரில் வசிக்கின்றனர். ஆனால், தர்மர் உழைப்பே உயர்வு தரும் என்பதால் தனது மனைவியோடு சேர்ந்து கிராமத்தில் கடை நடத்தி வருகிறார்.

அதற்காக 50 ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் 8 கி.மீ. சைக்கிளில் பயணித்து, கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இது குறித்து முதியவர் தர்மர் கூறியதாவது: சிறு வயதிலிருந்தே சைக்கிள் ஓட்டி வருகிறேன். பெரும்பாலும் சைக்கிளில்தான் எல்லா இடத்துக்கும் செல்வேன். உடல் உழைப்பு இருந்தால்தான் ஆரோக்கியம் நம்முடன் இருக்கும். இதுவரை உடம்புக்கு முடியாமல் நோய், நொடிக்கு ஆளாகி ஒருநாள்கூட படுத்ததில்லை.

இதற்காக தினமும் அதிகாலையிலேயே சைக்கிளை ஓட்டிக்கொண்டு பலசரக்குப் பொருட்களை வாங்க 4 கி.மீ. தொலைவில் உள்ள பேரையூர் செல்வேன். பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் சைக்கிளை உருட்டிக் கொண்டே வீட்டுக்குச் செல்வேன். அந்த நேரத்தில் கடையை மனைவி கவனித்துக்கொள்வார்.

வயதான காலத்தில் பெற்ற பிள்ளைகளையோ, மற்றவர்களையோ சார்ந்திருக்கக் கூடாது என்பதில் நானும், மனைவியும் உறுதியாக உள்ளோம். நம்மால் முடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும் என்பதால் லாப நோக்கமின்றி குறைந்த விலையில் தரமான பலசரக்குப் பொருட்களை ஊர் மக்களுக்கு வழங்கி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x