Published : 08 Aug 2023 04:07 AM
Last Updated : 08 Aug 2023 04:07 AM

திருப்பத்தூரில் இறந்த ஏழை தொழிலாளியை இந்து முறைப்படி அடக்கம் செய்த முஸ்லிம்கள்

ராஜாராம்

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உயிரிழந்த ஏழைத் தொழிலாளியை இந்து முறைப்படி முஸ்லிம்கள் அடக்கம் செய்தனர்.

திருப்பத்தூர் கான்பா நகரைச் சேர்ந்தவர் ராஜாராம் (62). இவர் அப்பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். மனைவி இறந்த நிலையில் மகன் மணி கண்டனுடன் (18) வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு 3 மாதங்களுக்கு முன்பு வாத நோய் ஏற்பட்டது. வேலைக்குச் செல்ல முடியாததால் வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வந்தார்.

இதையறிந்த கான்பா சாயபு பள்ளிவாசல் நிர்வாகிகள், ராஜாராம் மற்றும் அவரது மகனை பள்ளிவாசலின் ஒரு பகுதியில் தங்க அனுமதித்தனர். மேலும் ராஜாராமுவுக்கு சிகிச்சை அளிக்க உதவி செய்ததோடு, அவரது மகனுக்கு தனியார் நிறுவனத்தில் வேலையும் வாங்கிக் கொடுத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ராஜாராம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

அவரது உடலை நேற்று அச்சுக்கட்டு மயானத்தில் இந்து முறைப்படி இஸ்லாமியர்கள் அடக்கம் செய்தனர். இஸ்லாமியர்களின் இந்த மனிதாபிமான செயலை அனைத்துத் தரப்பினரும் பாராட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x