Last Updated : 05 Aug, 2023 04:42 PM

7  

Published : 05 Aug 2023 04:42 PM
Last Updated : 05 Aug 2023 04:42 PM

சிவகங்கை அருகே கிராமம் முழுவதும் உறிஞ்சு குழிகள் அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திய பெண் ஊராட்சித் தலைவர்!

பிரவலூரில் அமைக்கப்பட்ட உறிஞ்சு குழி

சிவகங்கை: சிவகங்கை அருகே பிரவலூரில் உறிஞ்சு குழிகள் அமைத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி பெண் ஊராட்சித் தலைவர் சாதித்து காட்டியுள்ளார்.

பிரவலூர் ஊராட்சியில் பிரவலூர், மாசாத்தியார் நகர், கோகுல கிருஷ்ணா நகர் ஆகிய 3 கிராமங்கள் உள்ளன. இங்கு 687 குடும்பங்களைச் சேர்ந்த 2,269 பேர் வசிக்கின்றனர். மழைக் காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் வீணாக ஆங்காங்கே தேங்கி நின்று மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

ஆனால், இந்த ஊராட்சியில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்தில் இருந்தது. இதையடுத்து மழைநீரை சேகரிக்க முடிவு செய்த ஊராட்சித் தலைவர் கவிதா, ஊராட்சி முழுவதும் 18 இடங்களில் பொது உறிஞ்சு குழிகளை அமைத்தார். தற்போது மழைநீர் முழுவதும் சேகரிக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதனால் ஆழ்துளைக் கிணறுகள், குடிநீர் தொட்டிகள், அடிபம்புகளில் தண்ணீர் தொடர்ந்து கிடைக்கிறது. இங்கு காலை, மாலை ஆகிய இரு வேளைகளும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத கிராமமாக பிரவலூர் மாறியுள்ளது.

மேலும் கடந்த காலங்களில் இந்த ஊராட்சியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட விவசாய பம்புசெட் மோட்டார்களை 3 மணி நேரம்கூட முழுமைாக இயக்க முடியாது. தற்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் 7 மணி நேரம் முதல் நாள் முழுவதும் மோட்டார்கள் இயக்கப்படுகின்றன.

இதுதவிர, இந்த ஊராட்சியில் தெருக்களில் கால்வாய் வசதியின்றி ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி இருந்தது. இதைத் தடுக்க 410 வீடுகளுக்கு கழிவுநீர் உறிஞ்சு குழிகள் அமைத்து கொடுக்கப்பட்டது. இதன்மூலம் தெருக் களில் கழிவுநீர் செல்வது முற்றிலும் தடுக்கப்பட்டது.

குப்பையை தரம் பிரித்து மட்கும் குப்பை மூலம் உரம் தயாரித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்கின்றனர். பிளாஸ்டிக் கழிவுகளை சாலைப் பணிக்கு விற்பனை செய்கின்றனர். மண்புழு உரமும் தயாரிக்கப்படுகிறது. ஊராட்சித் தலைவரின் முயற்சியால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததோடு, சுகாதாரமான ஊராட்சி யாகவும் மாறியுள்ளது. கடந்த ஆண்டு இந்த ஊராட்சிக்கு தூய்மைக் கிராமம் விருதாக ரூ.7.5 லட்சத்தை வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

ஊராட்சித் தலைவர் கவிதா

இதுகுறித்து ஊராட்சித் தலைவர் கவிதா கூறியதாவது: தூய்மை பாரத இயக்கம், 14-வது நிதிக்குழு மானிய நிதி போன்றவை மூலம் உறிஞ்சுகுழிகளை அமைத்தோம். மழைநீர் மட்டுமின்றி மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, அடிபம்புகளில் இருந்து வீணாகும் தண்ணீரைக் கூட உறிஞ்சு குழிகளில் விட்டோம். இதனால் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட வீணாவது இல்லை.

அவற்றின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சினை தீர்ந்ததோடு, விவசாயத்துக்கும் பம்புசெட் மோட்டார் கள் மூலம் தேவையான தண்ணீர் கிடைக்கிறது. வீடுகளில் அமைத்த உறிஞ்சு குழிகள் மூலம் கழிவுநீர் பிரச்சி னைக்கும் முற்றுப்புள்ளி வைத்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x