Published : 20 Jul 2023 12:28 PM
Last Updated : 20 Jul 2023 12:28 PM

பாலியல் வன்முறைகளில் இருந்து விடுபட பெண் தேயிலை தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு @ உதகை

உதகை: வட இந்தியாவில் அசாம், மேற்குவங்கம், தென்னிந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி, வால்பாறை மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் அதிகளவு தேயிலை தோட்டங்கள் உள்ளன.

இங்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் பெண்கள், பாலியல் துன்புறுத்தல் மற்றும் பிற வன்முறைகளுக்கு உள்ளாகின்றனர். தங்கள் வாழ்வாதாரம், குழந்தைகளின் கல்விக்காக தேயிலை தோட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களின் பாதுகாப்புக்காக, தோட்ட நிறுவனங்களின் பங்களிப்பு மூலமாக ‘பெண்கள் பாதுகாப்பு முன்னெடுப்பு நிதி’ விழிப்புணர்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், நீலகிரி மாவட்டத்திலுள்ள தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் பெண்கள் சமூக, பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாக அதிகாரம் பெறவும், பாலியல் துன்புறுத்தல் மற்றும் பிற வன்முறைகளில் இருந்து விடுபடவும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

பெண்கள் பாதுகாப்பு முன்னெடுப்பு நிதியுடன் சாக்‌ஷி அமைப்பினர் இணைந்து தேயிலை தோட்ட பெண் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, நீலகிரி மாவட்டத்திலுள்ள 25 தனியார் தேயிலை தோட்டங்களில், முதற்கட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சாக்‌ஷி அமைப்பின் உதவி மேலாளர் அ.வினோபா தலைமையில், உதகை அருகே சோலூரில் உள்ள டன்சாண்டல் எஸ்டேட்டில் பெண் தொழிலாளர்களுக்கு தன்னார்வலர்கள் கீர்த்தனா, வினோதா, ராஜா, டி.ஜே ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இவர்கள், நீலகிரி மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு தேயிலை தோட்டமாக சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக வினோபா கூறும்போது, "கிராமப்புறங்களில் உலகளாவிய பெண்கள் பாதுகாப்பு கட்டமைப்பை விரிவுபடுத்தவும், அனைத்து பெண்களும் சமூக, பொருளாதாரம் மற்றும் அரசியல்ரீதியாக அதிகாரம் பெற்றிருப்பதை உறுதி செய்யவும், பாலியல் துன்புறுத்தல் மற்றும் பிற வன்முறைகளில் இருந்து விடுபடவும் இந்த விழிப்புணர்வு திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

அசாம், மேற்கு வங்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 2 லட்சம் பெண் தேயிலை தொழிலாளர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண் தொழிலாளர்களுக்கு பாலின அடிப்படையிலான வன்முறை குறித்த விழிப்புணர்வு, புரிதலைஉருவாக்கவும், வன்முறையை தடுப்பதற்கும், அவற்றை எதிர்கொள்ளவும் கற்றுத்தரப்படும்.

தேயிலை தொழிலில் பெண் தொழிலாளர்களுக்கு உறுதியான மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றங்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. தேயிலை உற்பத்தியாளர்கள் ‘கிராமப்புறங்களில் உலகளாவிய பெண்களின் பாதுகாப்பு கட்டமைப்பை' செயல்படுத்துவதற்கு உதவுகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் பகுதிகளிலும், கேரள மாநிலத்தில் வயநாடு மாவட்டத்திலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தற்போது உதகை, குன்னூர், மஞ்சூர், கோத்தகிரி பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x