Published : 12 Jun 2023 03:35 PM
Last Updated : 12 Jun 2023 03:35 PM

நேர்மைக்கு கிடைத்த பரிசு... நிம்மதி! - ஓய்வுபெற்ற 94 வயது வட்டாட்சியர் பெருமிதம்

மதுரை: நேர்மையுடன் வாழ்வதே லட்சியம் என்ற கொள்கையுடன் வாழ்ந்து வருகிறார் 94 வயதான ஓய்வுபெற்ற வட்டாட்சியர் பி.எஸ்.நடராஜன். இவர் முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி டி.என்.சேஷனிடம் பாராட்டு பெற்றுள்ளார்.

ஊழல் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் புற்றுநோய். ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள் நேர்மையுடன் செயல்பட்டால், நலத்திட்டங்கள் சாமானிய மக்களை எளிதில் சென்றடையும். ஊழல்வாதிகளுக்கு மத்தியில் நேர்மையான அலுவலராக இருப்பது சிரமம்தான்.

ஆனால், பி.எஸ்.நடராஜன், தனது 24 வயதில் வருவாய்த் துறையில் இள நிலை உதவியாளராக அரசு பணியில் சேர்ந்து, வட்டாட்சியராக ஓய்வு பெறும் வரையிலும் நேர்மையை முழு மூச்சாகக் கடைப்பிடித்தவர். இது குறித்து மதுரை அண்ணா நகர் கிழக்கு, நியூ குறிஞ்சி ரெசிடென்சியில் வசித்து வரும் 94 வயது ‘இளைஞர்’ பி.எஸ்.நட ராஜன் ‘இந்து தமிழ் திசை'யிடம் கூறியதாவது:

எனது தந்தை சுப்பிரமணியன் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், அவர்களது கம்பெனியில் பணியாற்றியவர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக பணியைத் துறந்தவர். எங்களது பூர்வீகம் தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகிலுள்ள பழமார்நேரி. அப்பா சென்னையில் வேலை பார்த்ததால் அங்குதான் பிறந்து வளர்ந்தேன்.

எங்களது பெயருக்கு முன்னால் ஊரின் பெயரையும் குறிப்பிடுவதால், பழமார்நேரி சுப்பிரமணியன் மகன் நடராஜன் என்பதை பி.எஸ்.நடராஜன் என எழுதுவது வழக்கம். மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் நடத்திய தேர்வில், சென்னை மாகாணத்தில் 2-வது மாணவனாக தேர்வானேன். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 26.5.1955-ல் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தேன். படிப்படியாக பதவி உயர்வு பெற்று, 28.2.1989-ல் வட்டாட்சியர் நிலையில் ஓய்வு பெற்றேன்.

தந்தையைப்போல் பணியில் கடைசிவரை நேர்மையைக் கடைப்பிடித்தேன். அப்போது எனது மேலதிகாரி, ‘தவறு செய்யத் தெரியாதவர்’ என குறிப்பு எழுதிவைத்து கவுரவப்படுத்தினார். அதேபோல், நேர்மை, கண்டிப்புடன் இருந்த முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த போது,எனது நேர்மையை வெகுவாக பாராட்டினார்.

சில அதிகாரிகள் என்னை தவறு செய்ய நிர்பந்தப்படுத்தியபோதும் மறுத்துவிட்டேன். அரசு உதவியை நாடிவரும் ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் கிடைக்கச் செய்துள்ளேன். தர்மம் தலைகாக்கும் என்பர். அதற்கேற்ப 94 வயதிலும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும் வாழ் கிறேன் எனக்கு உறுதுணையாக மகன், மருமகள் உள்ளனர். நான் ‘தி இந்து' நாளிதழின் தீவிர வாசகன். எனது நேர்மையில் ‘தி இந்து’வுக்கும் பங்குண்டு.இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து அவரது மகனும், ஓய்வுபெற்ற காப்பீட்டுக்கழக அதிகாரியுமான பி.என்.சுந்தரேசன் கூறியதாவது: அதிகாலையில் ‘தி இந்து' ஆங்கிலம் ‘இந்து தமிழ் திசை' நாளிதழை லென்ஸ் மூலம் வாசித்து விடுவார். மரம், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, பறவைகளுக்கு இரை அளிப்பது என பரபரப்பாக இயங்குவார். 94 வயதிலும் கை நடுக்கமின்றி முத்து முத்தாக கவிதைகள் எழுதுவது, சங்கீதம் பாடுவது என அவரது செயல்கள் எங்களை உற்சாகப்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x