

யோகி ஆதித்யநாத் | கோப்புப் படம்
லக்னோ: ‘‘நாட்டின் வளத்தை சுரண்டியவர்கள், பிரதமர் மோடியின் வெளிப்படையான நிர்வாகத்தை கேள்வி கேட்கின்றனர்” என்று காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் மீது உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டினார்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்குப் பதில், ‘விக் ஷித் பாரத் கேரன்டி பார் ரோஜ்கர் அண்ட் அஜீவிக மிஷன் (கிராமின்)’ - (விபி-ஜி ஆர்ஏஎம் ஜி) என்ற பெயரில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், உ.பி. முதல்வர் ஆதித்யநாத் நேற்று லக்னோவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதிதாக கொண்டு வரப்பட்ட விபி-ஜி ஆர்ஏஎம் ஜி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை விளக்குவதற்காகவே இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தேன். இந்த நாட்டை பல ஆண்டுகளாக கொள்ளை அடித்தவர்கள் (காங்கிரஸ், இண்டியா கூட்டணி கட்சியினர்), பிரதமர் மோடியின் வெளிப்படையான நிர்வாகத்தை கேள்வி கேட்கின்றனர். நாட்டில் ஏழைகள், இளைஞர்களை பட்டினியில் வாடச் செய்த எதிர்க்கட்சியினர், தற்போது நாட்டை வலிமையாக்குவதற்கு எடுக்கப்படும் வெளிப்படையான நடவடிக்கைகள் மீது கேள்வி எழுப்புகின்றனர்.
பிரதமர் மோடியின் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை உயர்த்தும். வேலைவாய்ப்பை உறுதி செய்யும். முன்பு 100 நாட்களாக இருந்த வேலைவாய்ப்பு புதிய திட்டத்தில் 125 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் கிராமப்புறங்களில் உள்கட்டமைப்புகள் நிரந்தரப்படுத்தப்படும். இந்த திட்டம் கிராமங்களை மையமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இருந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் போலி வேலை அட்டை, வேலைக்கே வராமல் போலியாக வந்தது போல் கணக்கு காட்டுதல், தாமதமாக ஊதியம் வழங்குதல், செலவு கணக்குகள் இல்லாமை என பல மட்டங்களில் ஊழல் மலிந்து கிடந்தது. சரியான நேரத்துக்கு வேலை வழங்குவதில்லை, சரியான நேரத்துக்கு ஊதியம் வழங்குவது இல்லை என்று கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.
தற்போது பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள திட்டத்தால் கிராம மக்கள் பெரும் பலனடைவார்கள். இந்தச் சூழ்நிலையில் கடந்த காலங்களில் இதுபோன்ற திட்டங்களை ஏன் செய்யவில்லை என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினால் எதிர்க்கட்சிகளால் என்ன பதில் சொல்லமுடியும்? அந்த பயத்தில்தான் புதிய திட்டத்தை எதிர்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.