முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் பெயரில் மும்பை மூதாட்டியிடம் ரூ.3.75 கோடி மோசடி
மும்பை: முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் பெயரில் ஒரு கும்பல் மும்பையைச் சேர்ந்த ஒரு மூதாட்டியிடம் டிஜிட்டல் கைது மோசடி செய்து ரூ.3.75 கோடியை ஏமாற்றி உள்ளது தெரியவந்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த ஒரு மூதாட்டியை (68) கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் தொடர்புகொண்ட மர்ம நபர்கள், குலாபா காவல் நிலைய அதிகாரிகள் எனக் கூறியுள்ளனர். அவரது வங்கிக் கணக்கு ரூ.6 கோடி பணமோசடி வழக்கில் சிக்கியுள்ளதாகக் கூறி அவரை மிரட்டியுள்ளனர். அவரை ‘டிஜிட்டல் கைது' செய்வதாகக் கூறி, 24 மணி நேரமும் வீடியோ அழைப்பின் மூலம் கண்காணிப்பில் வைத்திருந்தனர்.
பின்னர், எஸ்.கே.ஜெய்ஸ்வால் என்பவர் அந்த மூதாட்டியை தொடர்புகொண்டு, தான் ஒரு சிபிஐ விசாரணை அதிகாரி என கூறியுள்ளார். அவர், உங்களுக்கு ஜாமீன் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் எனக் கூறியுள்ளார். இதற்காக, குணாதிசயத்தைப் பரிசோதிக்க வேண்டியிருப்பதாகக் கூறி அந்த மூதாட்டியை தனது வாழ்க்கையைப் பற்றி ஒரு கட்டுரை எழுத வைத்துள்ளார். பின்னர், ஒரு வீடியோ அழைப்பில் நீதிபதி உடையில் தோன்றிய நபர், தன்னை ‘‘நீதிபதி சந்திரசூட்’’ என்று கூறிக்கொண்டு மூதாட்டியின் ஜாமீன் மனுவை நிராகரிப்பது போல நாடகமாடியுள்ளார்.
இதையடுத்து அவரை தொடர்புகொண்ட அந்த கும்பல், வழக்கிலிருந்து விடுபட வேண்டுமானால், சொத்துகளைத் தணிக்கை செய்ய வேண்டும் என்று கூறி முதலீட்டு விவரங்களை பெற்றுள்ளனர். இதையடுத்து, முதலீட்டை தங்கள் பெயருக்கு மாற்றித் தந்தால் பின்னர் அந்தத் தொகை திருப்பித் தரப்படும் என வாக்குறுதி அளித்துள்ளனர். இதன்படி, சுமார் ரூ.3.75 கோடியை மோசடிக்காரர்கள் பெற்றுள்ளனர். அக்டோபர் மாதம் வரை அந்தப் பணம் திரும்ப வராததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி சைபர் போலீசில் புகாரளித்தார்.
மும்பை மேற்கு சைபர் பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், மோசடிப் பணத்தில் ரூ.1.7 கோடி குஜராத்தைச் சேர்ந்த ஒருவரது கணக்குக்குச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சூரத்தைச் சேர்ந்த ஜிதேந்திர பியானி (46) என்பவரை போலீசார் கைது செய்துவிசாரித்து வருகின்றனர்.
மற்றொரு மோசடி: இதேபோன்ற ஒரு பாணியில், ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரி டம் ரூ.20 லட்சம் மோசடி செய்த வழக்கில் காந்திநகரைச் சேர்ந்த கவுரவ் பலோட் (25) என்பவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த மோசடிகளில் ஈடுபடும் முக்கிய குற்றவாளிகள் வெளிநாடுகளில் இருந்து செயல்படுவதால், அவர்களைப் பிடிப்பதில் சிக்கல் நீடிப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
