

பாவ்நகர்: குஜராத்தில் லிவ்-இன் உறவில் இருந்த பெண் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், பேருந்து நிலையத்தில் குற்ற நிகழ்வை நடித்துக் காட்டிய கொலையாளியைக் காவல் துறையினர் லத்தியால் சரமாரியாக அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் பாவ்நகரைச் சேர்ந்த ஃபைசல் (20) மீது திருட்டு மற்றும் வன்முறை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் காஜல்பன் பரையா (40) என்ற பெண்ணுடன் கடந்த சில ஆண்டுகளாக ‘லிவ்-இன்’ முறையில் வாழ்ந்து வந்தார். கடந்த செப்டம்பர் 3-ம் தேதி பிற்பகலில் பாவ்நகர் பேருந்து நிலையத்தில் காஜல்பன் தனது நண்பர் ரவி என்பவருடன் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஃபைசலுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. கள்ளத்தொடர்பு சந்தேகம் மற்றும் மது அருந்துவது தொடர்பான தகராறில் ஆத்திரமடைந்த ஃபைசல், காஜல்பனை கொடூரமாக தாக்கினார்.
இதைத் தடுக்க முயன்ற நண்பர் ரவியும் தாக்குதலுக்கு உள்ளானார். பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்க்க, பல நிமிடங்கள் நீடித்த இந்த கொடூரத் தாக்குதல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. காயமடைந்த காஜல்பன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 4-ம் தேதி உயிரிழந்தார். காஜல்பனின் தாயார் அளித்த புகாரின்பேரில் நீலம்பாக் காவல் நிலையப் போலீஸார் ஃபைசல் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
கொலை நடந்த முறையை ஆய்வு செய்வதற்காக, காவலர்கள் குற்ற நிகழ்வை மீண்டும் நடித்துக் காட்டச் செய்தனர். அப்போது, பொதுமக்கள் நிறைந்த இடத்தில் ஃபைசலைக் காவல் துறையினர் சூழ்ந்துகொண்டு லத்தியால் சரமாரியாக விளாசினர். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.