புதுடெல்லி: மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்த பிறகு, அரசின் திட்டம் என்ன? என்பது பெரிய கேள்வியாக உள்ளது. இதை அமலாக்குவதற்கான மாற்று வழிகளை பிரதமர் நரேந்திர மோடி அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மக்களவையில் தோல்வியடைந்த மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான சட்டத் திருத்த மசோதா தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தல்களில் முக்கிய அரசியல் ஆயுதமாகிவிட்டது. இச்சூழலில் மகளிர் மசோதா மீண்டும் தாக்கலாகும் வாய்ப்புகள் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த இடஒதுக்கீடு வழங்குவதற்கான வழி முழுமையாக அடைக்கப்பட்டுவிடவில்லை. வரும் 2029 தேர்தல்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இன்னமும் உள்ளன.
இந்த திசையில் பிரதமர் மோடி அரசு தீவிரமாகச் செயல்படுவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மத்திய உயர்மட்ட அரசு வட்டாரங்களின்படி, இந்த இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதற்குப் பல மாற்று வழிகள் பரிசீலிக்கப்படுகின்றன.
மத்திய அரசு தற்போது அனைத்து அரசியல் கட்சிகளுடனும் விரிவான கலந்தாலோசனைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. தேவைப்பட்டால், அடுத்து வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் ஒரு புதிய மசோதா அறிமுகப்படுத்தப்படும் வாய்ப்புகளும் தெரிகின்றன. தற்போது, 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதா தோல்வியடைந்துள்ளது.
என்றாலும், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தொகுதி மறுவரையறை செயல்முறை தொடர்பான வேறு இரண்டு மசோதாக்கள் இன்னும் மக்களவையில் நிலுவையில் உள்ளன. இவற்றை தனக்கு வசதியான எந்த நேரத்திலும் வாக்கெடுப்புக்காக மக்களவை முன் முன்வைக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. இந்த மசோதாக்களின் தொகுதி மறுவரையறை மூலம் மக்களவைக்கான எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.
ஆனால், இதற்கும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு எம்பிக்களின் பெரும்பான்மை தேவைப்படும். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. 131 ஆவது திருத்த மசோதாவை எதிர்த்ததற்கும் இதுவே ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
இதற்கான இரண்டாவது மாற்று வழி என்னவென்றால், மொத்த இடங்களின் எண்ணிக்கையை 850 என்றாக்கி, தொகுதிகளின் எல்லைகளை மட்டும் மாற்றியமைப்பதாகும். அரசியல் ரீதியான ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு இந்த வழிமுறை எளிதாக அமையக்கூடும். மூன்றாவது மாற்று வழியின்படி, அரசியலமைப்பின் 334 ஏ பிரிவைத் திருத்தி, இடஒதுக்கீட்டுக்கும் தொகுதி மறுவரையறைக்கும் இடையிலான தொடர்பை நீக்குவதாகும்.
இதன் மூலம், தற்போதுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்குள் மட்டுமே பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க இயலும்.
தற்போதைய நிலையில், தொகுதி மறுவரையறைப் பணிகள் 2026 வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு மத்திய அரசு இந்த விவகாரங்களை மீண்டும் பரிசீலிக்க வேண்டியிருக்கும். 106 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் இப்போதும் நடைமுறையில் உள்ளது. கடந்த வாரம் வியாழக்கிழமை இரவில் மத்திய அரசு, 106-ஆவது அரசியலமைப்புத் திருத்தமான 'நாரி சக்தி வந்தன் சட்டம் 2023' ஐ அரசிதழில் வெளியிட்டது. இச்சட்டம் தற்போது முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது.
இச்சட்டத்தின் கீழ், பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பது மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறைவடைவது மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் தொகுதி மறுவரையறை ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 2029 இல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் இந்த இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமையன்று நிறைவேறாமல் போன மசோதாவானது, 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 816 என உயர்த்த முன்மொழிந்தது. இதன்மூலம், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை எளிதாகச் செயல்படுத்த முடியும் என்பதே அதன் நோக்கமாகவும் இருந்தது.
எனினும், இம்மசோதா நிறைவேறாதது அதன் மூலச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள 33 சதவீத இட ஒதுக்கீட்டு அளவை எவ்விதத்திலும் பாதிக்காது எனக் கருதப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்து, அதன் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செயல்முறையும் முழுமையாக முடிவடைந்த பின்னரே, இந்த இட ஒதுக்கீடு நடைமுறைக்கு கொண்டு வர முடியும்.
தற்போது நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் 2027 இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கணக்கெடுப்பு முடிந்த உடனேயே தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்படும். இந்த ஆணையமும் தனது பணிகளை விரைந்து நிறைவு செய்யும் பட்சத்தில், 2029 மக்களவைத் தேர்தல்களிலேயே பெண்களுக்கான இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த முடியும்.
இந்த வாய்ப்பையும் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிடுவதாக அரசின் உயர் அதிகாரிகள் வட்டாரம் குறிப்பிடுகிறது.