

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முன்னதாக பிரதமர் மோடி கூறும்போது, ‘‘பிஹார் தோல்வி எதிர்க்கட்சிகளை தொந்தரவு செய்ததாகத் தெரிகிறது. விரக்தி மன நிலையில் இருந்து வெளியே வந்து அவர்கள் பணியாற்ற வேண்டும். நாடாளுமன்றத்தில் அவர்கள் நாடகமாடுகிறார்கள்’’ என்றார்
இந்நிலையில் பிரதமரின் பதிவுக்கு கருத்து தெரிவிக்க முடியாது என்று ராகுல் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள நிலையில் அதற்கு காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா பதிலடி கொடுத்துள்ளார்.
பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறும்போது, “நாடாளுமன்றத்தை நடக்க விடாமல் எதிர்க்கட்சிகள் முடக்குவதாக பிரதமர் மோடி கூறுகிறார். டெல்லியில் காற்று மாசு, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி (எஸ்ஐஆர்) ஆகியவற்றால் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து நாம் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தலாமே. பின் வேறெதற்கு நாடாளுமன்றம் இருக்கிறது. நாங்கள் மக்கள் பிரச்சினைகளை விவாதிக்கத்தானே நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டோம். இது நாடகம் கிடையாது. நாடாளுமன்றத்தில் மக்களுக்காக பிரச்சினையை எழுப்பி பேசுகிறோம்’’ என்றார்.