பெற்றோர் ஐஏஎஸ் அதிகாரிகள் என்றால் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு கோருவது ஏன்? - உச்ச நீதிமன்றம் கேள்வி

பெற்றோர் ஐஏஎஸ் அதிகாரிகள் என்றால் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு கோருவது ஏன்? - உச்ச நீதிமன்றம் கேள்வி
Updated on
1 min read

புதுடெல்லி: பெற்றோர் ஐஏஎஸ் அதிகாரிகள் என்றால் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு கோருவது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

கர்நாடகாவில் வசிக்கும் குருபா சமுதாய மக்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (பிசி) சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த சமுதாயத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், பிசி இடஒதுக்கீட்டின் அடிப்படையில் கர்நாடக மின் வாரிய துறையின் இளநிலை பொறியாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சான்றிதழ் சரிபார்ப்பின்போது அவரது பிசி சாதிச் சான்றிதழ் ஏற்கப்படவில்லை.

இளநிலை பொறியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட இளைஞரின் தாய், தந்தை இருவரும் அரசுப் பணியில் உள்ளனர். இருவரும் ஆண்டுக்கு ரூ.19.48 லட்சம் ஊதியம் பெறுகின்றனர். எனவே கிரிமிலேயர் வரம்பின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இளைஞர் இடஒதுக்கீடு அடிப்படையில் இளநிலை பொறியாளர் பணியில் சேர முடியாது என்று கர்நாடக மின் வாரியம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகரத்னா, உஜ்ஜல் புயான் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக இளைஞரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது, “அரசுப் பணியில் குரூப் ஏ, குரூப் பி பிரிவில் உள்ள அதிகாரிகளின் பிள்ளைகள் மட்டுமே இடஒதுக்கீடு கோர முடியாது. இதர பிரிவு அரசு ஊழியர்கள் இடஒதுக்கீட்டு சலுகைகளைப் பெற முடியும்’’ என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: சம்பந்தப்பட்ட இளைஞரின் தந்தை அடிப்படை ஊதியமாக ரூ.53,900-ம், தாய் ரூ.52,650-ம் பெறுகின்றனர். அவர்களின் இதர படிகளையும் சேர்த்தால் இருவரும் நிறைவான ஊதியத்தைப் பெறுகின்றனர். சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஒருவேளை பெற்றோர் ஐஏஎஸ் அதிகாரிகள் என்றால் அவர்களின் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு கோருவது ஏன்?

சம்பந்தப்பட்ட இளைஞரின் பெற்றோர் நல்ல அரசு பணியில் உள்ளனர். அதிக வருவாயை ஈட்டுகின்றனர். அவர்கள் இடஒதுக்கீடு கோருவது நியாயமற்றது. இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அவர்கள் பதில் மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

பெற்றோர் ஐஏஎஸ் அதிகாரிகள் என்றால் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு கோருவது ஏன்? - உச்ச நீதிமன்றம் கேள்வி
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்: அஜ்மீர் ஷெரீப் தர்காவின் மதகுரு கோரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in