பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்: அஜ்மீர் ஷெரீப் தர்காவின் மதகுரு கோரிக்கை

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்: அஜ்மீர் ஷெரீப் தர்காவின் மதகுரு கோரிக்கை
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும், பசு வதை மற்றும் மாட்டு இறைச்சி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அஜ்மீர் ஷெரீப் தர்காவின் மதகுரு சையது சர்வார் சிஷ்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

வடமாநிலங்களில் பசு வதை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பசுக்களை கடத்துபவர்களை பொதுமக்களே பிடித்து போலீஸில் ஒப்படைக்கின்றனர். இந்நிலையில், அஜ்மீர் ஷெரீப் தர்கா மதகுரு சையது சர்வார் சிஷ்டி நேற்று கூறியதாவது:

இந்து சமூகத்தினருக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த விலங்காக பசு உள்ளது. அதற்கு உரிய மரியாதையும் அரசியலமைப்பு பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும். பசுவை தேசிய விலங்காக அறிவிப்பதற்கான சட்டத்தைக் கொண்டுவர நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரை பிரதமர் நரேந்திர மோடி கூட்ட வேண்டும். இத்தகைய மசோதாவை யார் ஆதரிக்கிறார்கள், யார் எதிர்க்கிறார்கள் என்பதைப் பார்ப்பது முக்கியம்.

இந்த விவகாரம் அரசியலுக்கு அப்பாற்பட்டு, சமூக நல்லிணக்கம், கலாச்சார மரியாதை ஆகிய கண்ணோட்டங்களில் அணுகப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கையை முஸ்லிம்கள் வரவேற்பார்கள்.

மாடுகள் பால் கொடுப்பதை நிறுத்தியவுடன் மக்கள் அவற்றை சாலைகளில் விட்டுவிடுகின்றனர். இதனால் தெருக்களில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை உண்ணும் நிலைக்கு அவை தள்ளப்படுகின்றன. இத்தகைய அலட்சியப்போக்கிற்கு எதிராகவும் கடுமையான தண்டனை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

பசு வதை மற்றும் மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு நாடு தழுவிய அளவில் தடை விதிக்க வேண்டும். மத்தியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக ஆட்சியில் இருந்தபோதிலும், இதற்கான கடுமையான சட்டங்களை அக்கட்சி கொண்டு வரவில்லை.

பசு வதை என்ற சந்தேகத்தின் பேரில் முஸ்லிம்கள் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்: அஜ்மீர் ஷெரீப் தர்காவின் மதகுரு கோரிக்கை
தவளை நோயால் தவிக்கும் பசு மாடுகள் - புதுக்கோட்டை விவசாயிகள் கவலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in