

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கியது.
இதன்படி, இப்போதைய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 7.66 கோடி பேருக்கு எஸ்ஐஆர் படிவம் விநியோகம் செய்யப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைப் பெறும்பணி கடந்த 11-ம் தேதி முடிவடைந்தது. பல்வேறு காரணங்களால் சுமார் 58 லட்சம் படிவங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்நிலையில், எஸ்ஐஆர் நடைமுறையின் முதல்கட்டமாக வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணைய இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
இந்த வரைவு பட்டியலில், இப்போதைய வாக்காளர் பட்டியலில் உள்ள சுமார் 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கான பட்டியல் தனியாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 24.17 லட்டம் பேர் உயிரிழந்துவிட்டதாகவும் சுமார் 12.20 லட்சம் பேர் குறிப்பிட்ட முகவரியில் வசிக்கவில்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதவிர, சுமார் 19.88 லட்சம் பேரின் முகவரி மாறி உள்ளது தெரியவந்துள்ளது. இதுதவிர, 1.38 லட்சம் போலி வாக்காளர்கள் அல்லது இரண்டு இடங்களில் பெயர் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (பிஎல்ஓ), வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் (பிஎல்ஓ) ஆலோசித்து, எஸ்ஐஆர் படிவங்களை தராத வாக்காளர்களின் பட்டியலை தயாரித்துள்ளனர். இந்தப் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள், படிவம் 6-ஐ பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் குறிப்பிட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் சிறப்பு கண்காணிப்பாளர் சுப்ரதா குப்தா கூறும்போது, “பூர்த்தி செய்து பெறப்பட்ட எஸ்ஐஆர் படிவங்களில் சுமார் 1.34 கோடி படிவங்களில், தாய், தந்தை பெயர் ஒரே மாதிரி இருப்பது, வாக்காளர் மற்றும் பெற்றோரின் வயது பொருந்தாத வகையில் இருப்பது உட்பட பல பிரச்சினைகள் உள்ளன.
இதுகுறித்து ஆய்வு நடத்தப்படும். மேலும் 30 லட்சத்துக்கும் அதிகமானவர்களின் பெயர்கள் 2002-ம் ஆண்டு பட்டியலுடன் இணைக்கப்படவில்லை. இதுபற்றியும் விசாரணை நடத்தப்படும். இப்பணிகள் முடிந்த பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்’’ என்றார்.