

எர்ணாகுளம்: கேரளாவில் வேலை பார்க்கும் மேற்கு வங்க தொழிலாளர்கள் மூலம் கேரளாவுக்குள் பெருமளவில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மாநில போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் எர்ணாகுளம் மாவட்டம் வாழக்குளம் பகுதியில் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மற்றும் பெரும்பாவூர் போலீஸார் இணைந்து மேற்கு வங்க தொழிலாளர்கள் வந்த 2 ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில் அவர்கள் தங்கள் பயணப் பைகளில் சிறிய பாக்கெட்டுகளில் மறைத்து வைத்திருந்த 35 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மேற்கு வங்கத்தை சேர்ந்த 4 தொழிலாளர்களை கைது செய்தனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், "இந்தக் கஞ்சா மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் ஆலுவா கொண்டுவரப்பட்டு, பிறகு ஆட்டோ மூலம் பெரும்பாவூர் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.
பெரும்பாவூரின் பாய் பஜார் பகுதியில் ஞாயிற்றுக் கிழமைகளில் பெருமளவில் கூடும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு விநியோகிப்பதற்காக இது கொண்டு வரப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றனர்.