

பிரதமர் மோடி
புதுடெல்லி: மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2014-ல் பிரதமர் பதவியேற்ற மோடி 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக ஊடகப் பக்கத்தில் #12YearsOfGaribKalyan என்ற ஹேஷ்டேக்குடன் இந்த மைல்கல் சாதனையை பகிர்ந்துள்ளார்.
இதையொட்டி பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது: கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா பல பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது. அந்த மாற்றங்களின் மையப்புள்ளியாக ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனே இருந்து வருகிறது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
பல தசாப்தங்களாக நாட்டின் வளர்ச்சி பலன்களைப் பெறாமல் விளிம்பு நிலையில் இருந்த மக்களுக்கு அனைத்து உதவிகளும் நேரடியாகக் கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்துள்ளது. குறிப்பாக விவசாயிகளுக்கான பிஎம்-கிசான் திட்டம், ஏழைகளுக்கான இலவச உணவு தானிய திட்டம், இலவச மருத்துவக் காப்பீடு, வீடமைப்பு, குடிநீர், சுகாதார பாதுகாப்பு மற்றும் பெண்கள் முன்னேற்ற திட்டங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளன.
மாதந்தோறும் 81 கோடிக்கும் அதிகமான மக்கள் இலவச உணவு தானியங்களைப் பெற்று வருகின்றனர். ‘பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ் 4 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ‘ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின் கீழ் 10.5 கோடிக்கும் அதிகமான கிராமப்புறக் குடும்பங்களுக்குக் குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
32 கோடிக்கும் அதிகமான பெண்கள் ‘ஜன் தன்' வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர். சுமார் 3 கோடி பெண்கள் ‘லட்சாதிபதி'களாக மாறியுள்ளனர். அதேவேளையில் நாடு முழுவதும் சுமார் 10 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு 91 லட்சத்துக்கும் அதிகமான சுய உதவிக் குழுக்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 2 கோடி இளைஞர்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியைப் பெற்று வருகின்றனர். ‘முத்ரா' கடன் திட்டத்தின் மூலம் 40 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் வழங்கப்பட்டுள்ளது. அரசு முன்னெடுப்புகள் மூலம் 10,000-க்கும் மேற்பட்ட புத்தொழில்கள் (ஸ்டார்ட்-அப்) அங்கீகரிக்கப்பட்டு ஆதரிக்கப்பட்டுள்ளன.
சுகாதாரத் துறையைப் பொறுத்தவரை, 70 கோடிக்கும் அதிகமான மக்கள் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். 60 கோடிக்கும் அதிகமான மக்கள் இலவசச் சிகிச்சைக்கான பலன்களைப் பெற்று வருகின்றனர். ‘ஜன் அவுஷதி' மையங்கள் மூலம் சுமார் 19,000 மலிவு விலை மருந்துகள் கிடைக்கின்றன. மேலும், 90 சதவீதத்துக்கும் அதிகமான தடுப்பூசிச் செயல்பாடு எட்டப்பட்டுள்ளது.
“வளர்ந்த இந்தியா” என்ற இலக்கை நோக்கி அரசு தொடர்ந்து முன்னேறும். மக்களின் வாழ்க்கையில் மேலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் இடையறாது செயல்படுத்தப்படும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி முதன்முதலில் 2014ம் ஆண்டு மே 26ம் தேதி பிரதமராகப் பதவியேற்றார். தற்போது, அவரது மூன்றாவது பதவிக்காலம் வெற்றிகரமாகத் தொடர்ந்துள்ளது. 12 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், பாஜக மற்றும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகள் இணைந்து ஒரு மாத கால நாடு தழுவிய பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன.
நேரு சாதனை முறியடிப்பு: மேலும், இந்திய அரசியல் வரலாற்றில் மிக நீண்ட காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்ச்சியாகப் பதவியில் இருக்கும் பிரதமர் என்ற ஜவஹர்லால் நேருவின் சாதனையை இன்று (ஜூன் 10) பிரதமர் நரேந்திர மோடி முறியடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.