

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தாவை எதிர்த்து போட்டியிடும் சுவேந்து அதிகாரி நேற்று பிரச்சாரம் தொடங்கினார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பவானிப்பூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி களமிறங்கியுள்ளார். இந்நிலையில் தனது தேர்தல் பிரச்சாரத்தை அவர் பவானிப்பூரில் நேற்று தொடங்கினார். முன்னதாக சக்பெரியா சாலையில் பாஜகவின் தேர்தல் அலுவலகத்தை அவர் திறந்துவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: இந்தத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெறும். தொண்டர்கள் அதிக உற்சாகத்துடன் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். மேற்கு வங்க மக்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். இம்முறை திரிணமூல் காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றுவோம் என சூளுரைக்கிறேன். மேற்கு வங்கம் முழுவதும் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுகிறது.
ஊழல் செய்பவர்களுக்கும், ஊடுருவல் செய்பவர்களுக்கும் தலைவராக இருப்பவர் (மறைமுகமாக திரிணமூல் தலைவர் அபிஷேக் பானர்ஜியை குறிப்பிட்டார்) இம்முறை தோற்கடிக்கப்படுவார். இவ்வாறு அவர் பேசினார். திரிணமூல் தலைவர் படுகொலை மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மசியுர் காஜி (41) நேற்று படுகொலை செய்யப்பட்டார்.
இவர் சம்பட்லா கிராம பஞ்சாயத்திலுள்ள 178 வாக்குச்சாவடியின் தலைவராக இருந்தார் மசியுர் காஜி. நேற்று அதிகாலை இவரை யாரோ சிலர், நோப்பாய் பாட் கெரி பகுதியில் குத்திக் கொலை செய்து வீசிவிட்டுச் சென்றுள்ளனர். போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.