

முதல்வர் மம்தாவுடன் அபிஷேக் பானர்ஜி
புதுடெல்லி: மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸின் (டிஎம்சி) இளைஞர் பிரிவு தலைவராக இருப்பவர் அபிஷேக் பானர்ஜி. மக்களவை எம்.பி.யான இவரை முதல்வர் மம்தா தனது வாரிசாக முன்னிறுத்தி வருகிறார். இதனால் கட்சியில் மம்தாவுக்கு அடுத்த நிலை தலைவராக அபிஷேக் முன்னிறுத்தப்படுகிறார்.
இந்நிலையில் 2026 தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் மம்தாவுக்கு இணையான தலைவராக அபிஷேக் உருவெடுத்துள்ளார். இருவரின் ஒருங்கிணைந்த தலைமை, மேற்கு வங்க அரசியலில் ஒரு தனித்துவமான அரசியல் நிலையை உருவாக்கியுள்ளது. முதல்வர் மம்தாவின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக அபிஷேக் மாறி வருகிறார். இது, மாநில தேர்தல் அரசியலில் மம்தாவின் மருமகன் அபிஷேக்கின் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.
சுமார் 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த இடதுசாரி கட்சிகளுக்கு பின் டிஎம்சி ஆட்சிக்கு வந்தது. அப்போது டிஎம்சியில் உறுப்பினரான அபிஷேக், கடந்த 2021 சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல்களின் போதும் தீவிரப் பங்கு வகித்திருந்தார். இருப்பினும், தற்போதைய பிரச்சாரத்தில் மம்தா - அபிஷேக் இடையே காணப்படும் ஒருங்கிணைப்பின் அளவு இதுவரை இல்லாத வகையில் உள்ளது.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் கொல்கத்தாவின் டைமண்ட் ஹார்பர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார் அபிஷேக். அப்போது முதல் அதே தொகுதியில் எம்.பி.யாக வென்று வருகிறார். இம்மாநிலத்தில் பாஜக முக்கிய எதிர்க்கட்சியாக படிப்படியாக உருவெடுத்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக தனது அரசியல் ஆக்ரோஷத்தை கடுமையாக வெளிப்படுத்தி வருகிறது. இந்த வகை அரசியல் கடந்த நான்கு தசாப்தங்களாக மேற்கு வங்கத்தில் மிகவும் அரிதாகவே காணப்பட்டது. எனவே, தற்போதைய சட்டப்பேரவை தேர்தல், டிஎம்சி மற்றும் பாஜக இடையே கடுமையானப் போட்டியை ஏற்படுத்தி உள்ளது.