

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது (எஸ்ஐஆர்) சுமார் 90 லட்சம் பெயர்களைத் தேர்தல் ஆணையம் நீக்கியது.
இவற்றில், கடந்த பிப்ரவரி 28 அன்று வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து நிரந்தரமாக சுமார் 63 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. எஞ்சிய 27 லட்சம் பெயர்கள், சரிபார்ப்பு நடைமுறைகள் நிறைவடைந்த பிறகு நீக்கப்பட்டன.
இந்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வாக்களிக்காதவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு விடும் என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.
இதனால், அம்மாநிலத்தின் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, நாட்டின் பல ரயில் நிலையங்களில் மேற்கு வங்க மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.
இவர்கள் தம் சொந்த ஊரின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்.23-க்கு முன்னதாக வீடு திரும்ப முடிவு செய்துள்ளனர். இது, ஒரு மிகப்பெரிய அளவிலான புலம்பெயர்வு அலையாக தற்போது நிகழ்ந்து வருகிறது.
இந்த புலம் பெயர்வின் முக்கிய மையப் புள்ளியாக மால்டா மற்றும் முர்ஷிதாபாத் மாவட்டம் உருவெடுத்துள்ளது. இவர்களால், வழக்கத்திற்கு மாறாகப் பெருமளவு கூட்டம், சென்னை, மும்பை, கேரளாவின் பல்வேறு பகுதிகளில் நிலவுகிறது. இவர்கள் தம் தொலைதூர குடியிருப்புகளுக்காக 36 முதல் 72 மணி நேரம் வரை பயணம் செய்கின்றனர்.
இந்த ரயில்களில் செல்லும் பயணிகளின் கூற்றுப்படி, அவர்களது அவசரப் பயணத்திற்குப் பின்னால் ஒரு பொதுவான கவலையே காரணமாக அமைந்துள்ளது. அதில், வாக்குப்பதிவு செய்யத் தவறிவிட்டால் அம்மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து தங்கள் பெயர்கள் நீக்கப்பட்டுவிடும் என்ற அச்சம் அவர்களிடம் எழுந்துள்ளது.
இந்த புலம் பெயர் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்களாக உள்ளனர். மேலும் இவர்கள் மேற்கு வங்க மாநில சட்டப் பேரவைக்கான பல தொகுதிகளில் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் ஒரு முக்கியப் பங்கை வகிப்பவர்கள் என கருதப்படுகிறது.
இதனிடையே, வாக்குப்பதிவிற்கு ஓரிரு நாட்களே உள்ள நிலையில் வாக்காளர்கள் பட்டியலில் சுமார் ஏழு லட்சம் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவர்களில், சுமார் 3.22 லட்சம் பேர் ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு தேர்தலின் முதல் கட்டத்தில் வாக்களிக்க உள்ளனர்.
எஞ்சிய சுமார் 3.88 லட்சம் பேர், ஏப்ரல் 29 அன்று நடைபெறும் வாக்குப்பதிவின் இரண்டாம் கட்டத்தில் தங்கள் வாக்குகளைச் செலுத்த உள்ளனர். இந்த மொத்த வாக்காளர் விவரங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.