“நாடாளுமன்றத்துக்குள் கும்பல் தாக்குதல் நடக்குமோ என பயந்தோம்” - கங்கனா பகிர்வு

“நாடாளுமன்றத்துக்குள் கும்பல் தாக்குதல் நடக்குமோ என பயந்தோம்” - கங்கனா பகிர்வு
Updated on
1 min read

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, சிஜேபி நடத்திய 'சலோ சன்சாத்' பேரணியின் போது, நாடாளுமன்றத்துக்குள் இருந்த எம்பிக்கள் அனைவரும் பேரணியாக வந்த கும்பல் தங்கள் மீது தாக்குதல் நடத்திவிடுமோ என்று அச்சமடைந்ததாக நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேறிய நிலையில், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுத்த டெல்லி காவல்துறையினரை பாராட்டிய கங்கனா, "நாங்கள் அனைவரும் மக்களவைக்குள் இருந்தோம்.

இந்த கும்பல் எங்களைத் தாக்கிவிடுமோ என்று நாங்கள் மிகவும் பயந்தோம். அசம்பாவிதங்கள் நடக்காமல் கேடயமாகச் செயல்பட்டு எங்களைப் பாதுகாத்த டெல்லி காவல்துறையினரைப் பாராட்டுகிறேன்" என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை குறித்துப் பேசிய கங்கனா, இளைஞர்கள் சார்ந்த பிரச்சினைகளில் எம்பிக்கள் நேரடியாகக் கவனம் செலுத்தி, அவர்களின் சந்தேகங்களுக்கு நேர்மறையாகப் பதிலளிக்க வேண்டும் எனப் பிரதமர் அறிவுறுத்தியதாகத் தெரிவித்தார்.

"அறிவியல் துறை சாதனைகள் மற்றும் ஹைட்ரஜன் ரயில் திட்டம் போன்றவை குறித்து விரிவாகப் பேச வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்" எனக் குறிப்பிட்டார்.

முன்னதாக, போராட்டக்காரர்கள் அரசை நிர்பந்தித்து அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைக்க முடியாது என்று தெரிவித்திருந்த கங்கனா, விவாதங்களை நாடாளுமன்றத்துக்குள்ளேயே நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். 

“நாடாளுமன்றத்துக்குள் கும்பல் தாக்குதல் நடக்குமோ என பயந்தோம்” - கங்கனா பகிர்வு
‘போராட்டத்தை முடித்துக் கொள்வதாக சொல்லி ராகுல் வார்த்தை தவறிவிட்டார்’ - மத்திய இணை அமைச்சர் குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in