

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் நேற்று கூறியுள்ளதாவது:
உன்னாவ் பெண்ணை சீரழித்த குற்றவாளிக்கு (முன்னாள் பாஜக எம்எல்ஏ செங்கர்) ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்பட்டு, அச்சத்தின் நிழலில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இது என்ன வகையான நீதி? நாம் ஒரு செயலிழந்த பொருளாதாரமாக மட்டும் மாறவில்லை; இதுபோன்ற மனிதாபிமானமற்ற சம்பவங்களால் நாம் ஒரு செயலிழந்த சமூகமாகவும் மாறிக்கொண்டிருக்கிறோம்.
ஜனநாயகத்தில், மாற்றுக்குரல் எழுப்புவது உரிமை. அதை அடக்குவது குற்றம். பாதிக்கப்பட்டவருக்கு மரியாதையும், பாதுகாப்பும், நீதியும் கிடைக்க வேண்டுமே தவிர கையறு நிலை, பயம் மற்றும் அநீதி அல்ல.
குல்தீப் சிங் செங்கருக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு எதிராக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை மரியாதையுடன் நடத்த வேண்டும். அவருக்கு அநீதியும் அச்சமும் ஏற்படுத்துவதற்குப் பதிலாக நீதி உறுதி செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.