மம்தா பானர்ஜி
கொல்கத்தா: பாஜகவை அகற்றும் ஒற்றை நோக்கம் மட்டுமே தங்களுக்கு உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் நடைபெற்ற ரம்ஜான் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், ‘‘திரிணமூல் காங்கிரஸின் முதன்மையான நோக்கம் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து பாஜகவை வெளியேற்றுவதும், அந்தக் கட்சியின் ஆதிக்கத்தில் இருந்து நாட்டைக் காப்பதுமே ஆகும்.
தியாகம் புரியும் வேட்கை இப்போது எங்கள் இதயங்களில் நிறைந்துள்ளது. இத்தேர்தலில் ‘கொலையாளிகளின் கரங்களில்’ (பாஜகவிடம்) எவ்வளவு வலிமை இருக்கிறது என்பதைப் பார்க்கவே நாங்கள் காத்திருக்கிறோம். அல்லா உங்களை ஆசீர்வதிக்கட்டும். இந்தியாவும் மேற்கு வங்கமும் செழிக்கட்டும். உங்கள் சுயமரியாதையை உயரத்தில் வைத்துக்கொள்ளுங்கள். சொல், உனது விருப்பம் என்ன என்று கடவுள் கேட்டால், பாஜகவை அகற்றி, தேசத்தைக் காப்பதே என்று சொல்வோம். இதுவே நமது ஒற்றை நோக்கம்.
தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (எஸ்ஐஆர்) மூலம் மக்களின் உரிமைகளைப் பறிக்க பிரதமர் மோடி முயல்கிறார். குடிமக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். இதற்காகவே நான் கொல்கத்தாவில் இருந்து டெல்லி வரை சென்றேன்; கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதிட்டேன். மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நான் நம்புகிறேன்.
மேற்கு வங்கத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதரவாக நான் இருக்கிறேன். அனைத்து சாதியினருடனும், அனைத்து மதத்தினருடனும், சமூகத்தின் அனைத்துப் பிரிவினருடனும் நான் உறுதுணையாக நிற்கிறேன். இந்த போராட்டத்தை நான் தொடர்ந்து முன்னெடுப்பேன். பிரதமர் மோடி, நமது உரிமைகளைப் பறிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
நீங்கள் (மத்திய அரசு) எங்கள் அரசாங்கத்தை வலுக்கட்டாயமாக கட்டுப்படுத்தப் பார்க்கிறீர்கள். குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த விரும்புகிறீர்கள். எனினும், நாங்கள் அஞ்ச மாட்டோம். யார் அச்சம் கொள்கிறார்களோ அவர்கள் அழிந்து போவார்கள். யார் போராடுகிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்.
பாஜக என்பது திருடர்கள் மற்றும் குண்டர்களின் கட்சி. துரோகிகளின் கட்சி. வாக்குகளைப் பறிப்பதற்காக பாஜகவிடம் இருந்து பணம் பெறும் துரோகிகளும் இங்கே இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து நான் சொல்கிறேன், எதிரிகள் எவ்வளவுதான் தீமையை செய்ய நினைத்தாலும் என்ன ஆகிவிடப் போகிறது? கடவுளின் விருப்பம் எதுவோ அதுவே இறுதியில் நடக்கும்’’ என தெரிவித்தார்.