

புதுடெல்லி: எல்லைச் சாலைகள் அமைப்பின் சார்பில் லடாக், காஷ்மீர், அருணாச்சல், சிக்கிம், இமாச்சல், உத்தராகண்ட், ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 125 சாலைகள், பாலங்கள் ரூ.5,000 கோடியில் கட்டப்பட்டு உள்ளன.
டெல்லியில் நேற்று நடந்த விழாவில் இந்த சாலைகள், பாலங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி வாயிலாக திறந்து பேசியதாவது: எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கில் 920 மீட்டர் நீளத்துக்கு ஷியோக் சுரங்கப்பாதை கட்டப்பட்டு உள்ளது. இது பொறியியல் அதிசயம் ஆகும். இதன்மூலம் கடும் பனிப்பொழிவு,பனிச்சரிவு ஏற்பட்டாலும் இந்திய ராணுவ வீரர்களால் எளிதில் எல்லைப் பகுதியைச் சென்றடைய முடியும்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியா நினைத்திருந்தால், பாகிஸ்தானை துவம்சம் செய்திருக்க முடியும். எனினும் இந்தியா நிதானத்தைக் கடைப்பிடித்தது. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் ராணுவ வலிமையைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்தது.
பாதுகாப்புத் துறை மட்டுமன்றி பொருளாதாரத்தில் இந்தியா அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஒரு காலத்தில் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்து வந்தோம். கடந்த 2014-ம் ஆண்டில் இந்தியாவின் ஆயுத உற்பத்தி ரூ.46,000 கோடியாக இருந்தது. இப்போது ஆயுத உற்பத்தி ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி ரூ.1,000 கோடிக்கும் குறைவாகவே இருந்தது. இப்போது இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி ரூ.24,000 கோடியை எட்டியுள்ளது. வரும் காலத்தில் ஆயுத ஏற்றுமதியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.