

புதுடெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக காலவரையற்ற உண்ணாவிரதமிருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில், டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 28 நாட்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டத்தில் பங்கேற்று சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டு வரும் தொடர் உண்ணாவிரதம் இன்று 21-வது நாளை எட்டியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 20-ம் தேதி கூட உள்ளதை முன்னிட்டு அன்றைய தினம், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்று கோரிக்கை மனு அளிக்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை சோனம் வாங்சுக்கை டெல்லி போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி டெல்லி சாஃப்டர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இது தொடர்பாக டெல்லி போலீஸ் வெளியிட்ட அறிக்கையில், “டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையின்படி அத்தியாவசிய மருத்துவ சிகிச்சைக்காக சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் கலைந்து செல்ல வலியுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.
சாஃப்டர்ஜங் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “சோனம் வாங்சுக் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுயநினைவுடனேயே இருக்கிறார். அவரது உடலின் முக்கிய அவயங்களின் செயல்பாடுகள் சீராகவே இருக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே மருத்துவமனையை சுற்றி காவல்துறை, துணை ராணுவப் படையினரின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அபிஜித் தீப்கே உண்ணாவிரதம்:
ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதம் இருந்து வந்த சோனம் வாங்சுக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், தான் உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், “நான் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்குகிறேன். இங்குள்ள யாரும் பின்வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த இயக்கம் இன்னும் பெரிதாக வளரும். சோனம் வாங்சுக்கை அப்புறப்படுத்தி அவர்கள் மிகப்பெரிய தவற்றை செய்துள்ளனர். எல்லோரும் ஜந்தர் மந்தர் பகுதிக்கு திரும்புங்கள். நமது இயக்கம் இங்கிருந்து வளரட்டும், ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கிய பயணம் திட்டமிட்டபடி நடக்கட்டும்” என்று அறைகூவல் விடுத்துள்ளார்.
முன்னதாக நேற்றிரவு பேசிய சோனம் வாங்சுக் “நான் வெளியில் பலவீனமாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் மிகவும் வலிமையாக இருக்கிறேன். நீங்கள் அனைவரும் உள்ளேயும் வெளியேயும் வலிமையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி நாம் அமைதிப் பேரணியை நடத்தும்போது இந்த ஆற்றல் நமக்குத் தேவைப்படும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து சென்று ஜனநாயகத்தின் ஆலயத்தில் நமது கோரிக்கையை முன்வைப்போம்.
எந்த விலை கொடுத்தாவது ஜூலை 20 வரை நான் உயிரோடு இருப்பேன். நீங்கள் வராமல் ஜூலை 20 போராட்டம் வெற்றிபெறவில்லை என்றால், நான் ஆவியாக திரும்பி வருவேன்” என்று கூறியிருந்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 தொடங்கவுள்ள நிலையில் இன்று (ஜூலை 18) காலையில் சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளார்.
மனைவி கண்டிப்பு: சோனம் வாங்சுக்கின் மனைவி, கீதாஞ்சலி அங்மோ தனது எக்ஸ் பக்கப் பதிவில், “சோனம் அனுமதிக்கப்பட்டுள்ள சாஃப்டர்ஜங் மருத்துவமனையில் தான் நான் இருக்கிறேன். என்னிடம் அனுமதி பெறாமல் வாங்சுக்குக்கு வாய்வழியாக உண்ண எதுவும் அளிக்கக் கூடாது. ஊசி மூலமாகவும் ஏதும் செலுத்தக் கூடாது. என்னுடைய, எனது குடும்பத்தினருடைய மற்றும் அவரது மருத்துவர்களின் அனுமதியைப் பெற்றே எதுவும் செய்ய வேண்டும்” என்று கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள் கண்டனம்: சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளன.
ஆம் ஆத்மி முக்கியத் தலைவர் சவுரவ் பரத்வாஜ், ”டெல்லி போலீஸார் சாதாரண நபர்களைப் போல் உடையணிந்து, ஸ்போர்ட்ஸ் ஷூக்களுடன் வந்து யாரும் எதிர்பாராதபோது வலுக்கட்டாயமாக சோனம் வாங்சுக்கை அப்புறப்படுத்தியுள்ளனர். ஊடகங்கள் இந்த நிகழ்வை பதிவு செய்யாதபடி தடுத்தனர்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் எம்பி. சாகரிகா கோஷ், “என்ன மாதிரியான அதிர்ச்சிகரமான அரசு வன்முறை இது? தார்மீக பொறுப்புகளில் வறட்சிகண்ட மோடி அரசு இப்படியான நடவடிக்கைகளைத் தான் எடுக்கும். இது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று கூறியுள்ளார்.
சமாஜ்வாதி எம்.பி. டிம்பிள் யாதவ், “சோனம் வாங்சுக் கட்டாய அப்புறப்படுத்தல் வெறும் ஒரு நடவடிக்கை அல்ல. இது ஜனநாயகம் மற்றும் அரசமைப்பின் மீதான தாக்குதல். பாஜகவுக்கு வரவர அறவழிப் போராட்டங்களைக் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை. இது சர்வாதிகாரம்” என்று எக்ஸ் பதிவில் கண்டித்துள்ளார்.