

புதுடெல்லி: டெல்லி, மும்பை, கொல்கத்தா, குவாஹாட்டி, அகர்தலா, சிலிகுரியில் உள்ள வங்கதேச தூதரகங்கள் முன்பு நேற்று போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லியில் ஏராளமானோர் திரண்டு, போலீஸ் தடுப்புகளை உடைத்து முன்னேறியதால் பதற்றம் ஏற்பட்டது.
கடந்த 2024-ம் ஆண்டில் வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஹேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவரை ஒப்படைக்க வேண்டுமென்று மத்திய அரசிடம் வங்கதேச இடைக்கால அரசு வலியுறுத்தி வருகிறது. எனினும் ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைப்பது குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.
தற்போது வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி நடத்தி வருகிறது. அந்த நாட்டில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் பல்வேறு மாணவர் சங்கங்கள் உருவாக்கிய தேசிய மக்கள் கட்சி,
வங்கதேச தேசிய கட்சி, வங்கதேச ஜமாத் இ இஸ்லாமி உள்ளிட்ட பிரதான கட்சிகள் போட்டியிடுகின்றன. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில் இன்கிலாப் மஞ்சா என்ற மாணவர் போராட்ட குழுவின் மூத்த தலைவரும், டாக்கா 8 தொகுதியின் வேட்பாளருமான ஷெரீப் உஸ்மான் ஹாடி அண்மையில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டதாக சந்தேகிக்கப்படும் பைசல் கரீம் இந்தியாவில் பதுங்கி இருப்பதாக வங்கதேச சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டன.
இதன் காரணமாக வங்கதேசத்தில் வாழும் சிறுபான்மை இந்துக்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 18-ம் தேதி மைமன் சிங் மாவட்டம், பலுகா பகுதியை சேர்ந்த தீபு சந்திர தாஸ் (30) அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இதைக் கண்டித்து இந்தியாவில் செயல்படும் வங்கதேச தூதரகங்கள் முன்பு விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடந்த சில நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதன் காரணமாக டெல்லி, மும்பை, கொல்கத்தா, குவாஹாட்டி, அகர்தலா, சிலிகுரி ஆகிய நகரங்களில் உள்ள வங்கதேச தூதரகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன.
இந்த சூழலில் விஎச்பி, பஜ்ரங் தளம், சர்வ பாரதிய இந்தி பெங்காலி சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் நேற்று டெல்லியில் உள்ள வங்கதேச தூதரக அலுவலகம் முன்பு குவிந்தனர். அவர்கள் போலீஸ் தடுப்புகளை தாண்டி முன்னேறினர். இதனால் பெரும் பதற்றம் எழுந்தது. போராட்டக்காரர்களை போலீஸார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள வங்கதேச தூதரகம் முன்பு நேற்று பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
மகாராஷ்டிர தலைநகர் மும்பை, திரிபுரா தலைநகர் அகர்தலா, அசாமின் குவாஹாட்டி, மேற்குவங்கத்தின் சிலிகுரி பகுதிகளில் வங்கதேச கிளை தூதரகங்கள் செயல்படுகின்றன. அந்த தூதரகங்கள் முன்பு பாஜக, விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. உத்தர பிரதேச தலைநகர் லக்னோ, மத்திய பிரதேச தலைநகர் போபால், காஷ்மீரின் ஜம்மு பகுதி உட்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வங்கதேச அரசை கண்டித்து நேற்று போராட்டங்கள் நடைபெற்றன.
இந்திய தூதருக்கு சம்மன் வங்கதேச வெளியுறவுத் துறை சார்பில் அந்த நாட்டுக்கான இந்திய தூதர் பிரணாய் வர்மாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதன்படி இந்திய தூதர் பிரணாய் வர்மா நேற்று காலை டாக்காவில் உள்ள வெளியுறவுத் துறை அலுவலகத்துக்கு சென்றார். அப்போது வங்கதேச வெளியுறவு செயலாளர் ஆசாத் ஆலம் சியாம், இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து ஆழ்ந்த
கவலை தெரிவித்தார். வங்கதேச தூதரகங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இந்திய தூதரிடம் அவர் வலியுறுத்தினார்.
ஐ.நா. சபை கண்டனம்: ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்தரேரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபானி துஜாரிக் நிருபர்களிடம் கூறியதாவது: வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை தாக்குதல்கள் மிகுந்த கவலை அளிக்கிறது. அங்கு ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாக்க வேண்டியது அந்த நாட்டு அரசின் கடமை. தீபு சந்திர தாஸ் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதை ஐ.நா. சபை வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் வால்கர் துர்க் கூறும்போது, “வங்கதேசத்தில் அனைத்து சமூக மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மனித உரிமைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். இப்போதைய சூழலில் வங்கதேசத்தில் உடனடியாக அமைதி திரும்ப வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
10,000 இந்திய மாணவர்களின் நிலை? - வங்கதேசத்தில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவ, மாணவியர் மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர். இது தொடர்பாக அகில இந்திய மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், “வங்கதேசத்தில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும். இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.