5 நாள் நடந்த சுகப்பிரசவத்தில் உ.பி. பெண்ணுக்கு 4 குழந்தை

பிரதிநிதித்துவப்படம்

பிரதிநிதித்துவப்படம்

Updated on
1 min read

மொராதாபாத்: உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் ஓவரி கிராமத்தைச் சேர்ந்தவர் அமீனா. இவர் பிரசவத்துக்காக லோதிப்பூரில் உள்ள தீர்த்தங்கர் மகாவீர் பல்கலைக்கழக மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி சேர்க்கப்பட்டார். கர்ப்ப காலத்தின்போது அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது வயிற்றில் 4 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.

அதனால் மருத்துவர்கள் அதிக எச்சரிக்கையுடன் அவருக்கு பிரசவம் பார்த்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல் நாள் இரவே அவருக்கு முதல் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது.

அமீனாவுக்கு உடல்நிலை பாதிப்படைந்து இருந்ததால் அவருக்கு சிசேரியன் சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொள்ளவில்லை. அவர் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 14-ம் தேதி மேலும் 3 குழந்தைகளை சுகப்பிரசவத்தில் அவர் பெற்றெடுத்தார். அதாவது 5 நாட்களாக நடந்த சுகப்பிரசவத்தில் 4 குழந்தைகளை அவர் பெற்றெடுத்தார். தற்போது தாயும், 4 குழந்தைகளும் நலமாக உள்ளனர். இதில் 2 குழந்தைகள் ஆண், 2 குழந்தைகள் பெண்.

இதுகுறித்து அமீனாவுக்கு பிரசவம் பார்த்த மருத்துவக் குழுவின் தலைவர் டாக்டர் ஷுப்ரா அகர்வால் கூறும்போது, “இந்த மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் சுகப்பிரசவத்தில் பிறந்தது இதுவே முதல்முறை. அதிக ரிஸ்க் இருந்தபோதும் அவரை அதிக கவனத்துடன் சிகிச்சை அளித்து குழந்தைகளை சுகப்பிரசவத்திலேயே பெறச் செய்தோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 குழந்தைகளும் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

<div class="paragraphs"><p>பிரதிநிதித்துவப்படம்</p></div>
சார் தாம் யாத்திரை 1 மாதத்தில் 12 லட்சம் பக்தர்கள் தரிசனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in