

புதுடெல்லி: உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதற்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் உட்பட ஏராளமான போராட்டக்காரர்கள் இன்று (டிச.26) டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்காரின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு வெளியே பதாகைகளை ஏந்தியபடி, போராட்டக்காரர்கள் உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக, "பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதை நிறுத்துங்கள்" என முழக்கங்களை எழுப்பினர்.
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர் யோகிதா பயானா மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டத்தின்போது பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார், “ எனது மகள் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்ததால் உயர் நீதிமன்றத்துக்கு வந்து போராடுகிறேன். நான் ஒட்டுமொத்த உயர் நீதிமன்றத்தையும் குறை கூறவில்லை. மாறாக, எங்கள் நம்பிக்கையைச் சிதைத்த அந்த இரண்டு நீதிபதிகளை மட்டுமே குறை கூறுகிறேன்.
முன்னர் நீதிபதிகள் எங்கள் குடும்பத்துக்கு நீதி வழங்கினர். ஆனால், இப்போது குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இது எங்கள் குடும்பத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி. எனக்கு உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருப்பதால், நாங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம்" என்று அவர் கூறினார்.
இதனிடையே, உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குல்தீப் செங்கரின் ஆயுள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது.
பின்னணி என்ன? - கடந்த 2017-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் பங்கார்மாவு தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருந்த குல்தீப் சிங் செங்கார், சிறுமி ஒருவரை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் செங்காரைக் கைது செய்தனர். தொடர்ந்து பாஜகவில் இருந்தும் செங்கார் நீக்கப்பட்டார்.
இதற்கிடையே வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் உட்பட உறவினர்கள் சிலர், வழக்கறிஞருடன் ரேபரேலியில் உள்ள உறவினரைச் சந்திக்கச் சென்றபோது லாரி ஒன்று இவர்கள் காரின் மீது மோதியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர், பாதிக்கப்பட்ட சிறுமி படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார். அவர் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதையடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் விபத்து ஏற்படுத்திய வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டது. குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்ட 10 பேர் மீது கொலை, சதி, கொலை முயற்சி ஆகிய பிரிவுகளில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் டெல்லிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து குல்தீப் சிங் செங்கருக்கு 2019-ல் விசாரணை நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் செவ்வாய்க்கிழமை அன்று குல்தீப் சிங் செங்காருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்தது. மேலும், அவருக்கு நிபந்தனை ஜாமீனும் அளித்துள்ளது. இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை கொலை செய்த வழக்கில் அவர் தண்டனையை அனுபவித்து வருகிறார். அந்த தண்டனையையும் சஸ்பெண்ட் செய்ய கோரி அவர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.