

மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி
புதுடெல்லி: குழந்தைத் திருமணங்களைத் தடுக்க 100 நாள் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: குழந்தைத் திருமணங்களைத் தடுக்க 1929-ம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு அவ்வப்போது இந்த சட்டம் பலப்படுத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் இப்போது அமலில் உள்ளது. ஆனாலும் இந்த முறை இன்னமும் சில இடங்களில் நீடிக்கிறது.
குழந்தைத் திருமணங்களை நாட்டு மக்கள் சகித்துக் கொள்ளக்கூடாது. நம் நாட்டில் நடைபெறும் ஒரு குழந்தைத் திருமணத்தைக் கூட ஏற்றுக் கொள்ளக் கூடாது. எனவே, இந்த நடைமுறையை ஒழிக்க மாநில அரசுகள், சமூகக் குழுக்கள் மற்றும் சமூக தலைவர்கள் ஒன்றிணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும்.
குழந்தைத் திருமணம் என்பது வெறும் சட்ட மீறல் மட்டுமல்ல. அது ஒரு மகளின் குழந்தைப் பருவத்தையே பறித்து, அவளை சிறு வயதிலேயே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளுகிறது. இதனால் கற்பனை செய்ய முடியாத துன்பத்தை சிறுமிகள் அனுபவிக்க வேண்டி உள்ளது.
பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம் என்ற மத்திய அரசின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. குறிப்பாக, பாலின விகிதம் அதிகரித்து வருவதுடன் உயர்கல்வியில் பெண்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.
நமது மகள்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் வேகமாக முன்னேறி வருகிறார்கள். குறிப்பாக, விளையாட்டு, ராணுவம், சுரங்கம், விண்வெளி உட்பட அனைத்து சவாலான பணிகளிலும் பெண்கள் வரலாறு படைத்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.