

புதுடெல்லி: வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கத்தை இணைக்கும் வகையில் சிலிகுரி பூமிக்கடியில் 40 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் சிலிகுரி பாதை இந்தியாவின் பிரதான பகுதியையும் வட கிழக்கு மாநிலங்களையும் இணைக்கிறது. இது 22 கி.மீ. அகலம் கொண்ட 60 கி.மீ. தொலைவுடைய மிக குறுகிய பாதை ஆகும். இதன் இரு புறமும் நேபாள, வங்கதேச எல்லைகள் அமைந்துள்ளன.
வடபகுதியில் பூடான் எல்லை உள்ளது. சீனா மற்றும் வங்க தேசத்தால் சிலிகுரி பாதைக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் நீடிக்கிறது. இதை எதிர்கொள்ள அங்கு பூமிக்கடியில் ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொலி வாயிலாக நேற்று செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: வடகிழக்கு மாநிலங்களையும் இந்தியாவின் பிரதான பகுதியையும் இணைக்கும் வகையில் சிலிகுரி பாதையில் 40 கி.மீ. தொலைவுக்கு பூமிக்கடியில் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
பாதுகாப்பு ரீதியாக இது மிகவும் முக்கியமான திட்டமாகும். மேலும் தற்போது இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் தடத்தை, 4 வழித்தடமாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.