

புதுடெல்லி: கடந்த 2025 நவம்பரில், ஹரியானாவின் பரிதாபாத் பகுதியில் 2,900 கிலோ வெடிமருந்துகளை காவல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சதித்திட்டத்தில் தொடர்புடைய டாக்டர் முசம்மில் ஷகீல், டாக்டர் அடில் ரத்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதனால் உமர் முகமது என்ற தற்கொலைப்படை தீவிரவாதியிடம் பெருத்த அச்சமும், பதற்றமும் ஏற்பட்டது. அவர் 2025 நவம்பர் 10 அன்று டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டை வெடிக்கச் செய்தார். இந்தத் தற்கொலைத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விரிவான விசாரணை நடத்தியது. தீவிரவாதிகளின் சதித்திட்டம் மற்றும் அதில் மருத்துவ நிபுணர்களின் பங்களிப்பை என்ஐஏ அம்பலப்படுத்தியது. இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேருக்கு எதிராக அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ‘ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்-காய்தா’ தடைக் குழுவிடம் பகுப்பாய்வு மற்றும் தடைகள் கண்காணிப்புக் குழுவின் 38-வது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் டெல்லித் தாக்குதலுக்கு `இந்திய துணைக் கண்டத்துக்கான அல்-காய்தா’ அமைப்பே காரணம் என்றும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அல்-காய்தா அமைப்பு பெரிய குழுக்களாகச் செயல்படுவதில்லை. அதற்குப் பதிலாக, சிறிய மற்றும் தனித்தனி செல்களாகத் தன் வலைப்பின்னலை அது விரிவுபடுத்தி வருகிறது.
வேதியியல் மற்றும் உயிரியல் ஆயுதங்களை உருவாக்க அந்த அமைப்பு தொடர்ந்து முயன்று வருகிறது. அண்டை நாடான வங்கதேச நிலப்பரப்பைப் பயன்படுத்தி புதிய தீவிரவாத அமைப்புகளை உருவாக்க அல்-காய்தா முயலக்கூடும் என்றும் ஐ.நா. எச்சரித்துள்ளது. இதன் மூலம், எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து இந்தியா தொடர்ந்து தெரிவித்து வந்த கவலைகளை ஐ.நா. அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.