

மம்தா பானர்ஜி | கோப்புப்படம்
புதுடெல்லி: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் 2 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இது மாநிலத்தின் தேர்தல் வரலாற்றில் 25 ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாகும்.
மேற்கு வங்கத்தில் 2006ம் ஆண்டு 5, 2011ம் ஆண்டு 6, 2016ம் ஆண்டு 7, 2021ம் ஆண்டு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. பிஹார், உ.பி.யில் தேர்தல் வன்முறைகள் அதிகமாக இருந்தது போலவே மேற்கு வங்கத்தில் சூழல் நிலவியதால் பல கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
எனினும், சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில், ஒரு வாக்குச் சாவடியில் கூட மறுவாக்குப் பதிவுக்கான அவசியம் ஏற்படவில்லை. மேற்கு வங்கத்திலும் கடந்த பல தேர்தல்களில் வன்முறைகள் நிகழ்ந்துள்ளன.
குறிப்பாக, மம்தா பானர்ஜி இடதுசாரி கட்சிகளை எதிர்த்துப் போட்டியிட்ட கால கட்டத்தில் பல அரசியல் படுகொலைகள் நிகழ்ந்தன. தற்போது நிலைமை மாறி வன்முறை குறைந்துள்ளது. மேற்கு வங்கத்தில் 2 கட்ட தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்திருப்பதற்கு இதுவே முக்கிய காரணம்.
மேலும், மேற்கு வங்கத்தில் 480 கம்பெனி துணை ராணுவப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், அப்படி 2 கட்டமாகத் தேர்தல் நடத்துவதன் மூலம், யாருக்கு பலன். எந்த கட்சிக்கு இழப்பு என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
வழக்கமானக் கருத்துக்களின்படி, ஆட்சியில் இருப்பவர்களுக்குத் தங்கள் விருப்பப்படி செயல்படுவதற்கான அனுகூலம் எப்போதும் உண்டு. ஆனால், 2 கட்ட தேர்தலால் ஆளும் கட்சி தொண்டர்கள் அனைத்து தொகுதியிலும் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது.
முக்கிய எதிர்க்கட்சியாகியான பாஜக தனது முழு பலத்தையும் பிரயோகித்து வருகிறது. அதேவேளையில், மம்தா சற்றும் பின்வாங்கத் தயாராக இல்லை. எனவே, மேற்கு வங்கத்தில் நடைபெறும் இந்தத் தேர்தல் அனைவரின் கவனத்துக்கும் வந்துள்ளது.