திரிணமூல் எம்.பி.மஹுவா மொய்த்ரா
மேற்கு வங்க தேர்தல் பார்வையாளருடன் திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா மோதல்
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகின்றன. இதற்காக தேர்தல் நுண் பார்வையாளர்களை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 18-ம் தேதி எக்ஸ் சமூக வலைதளத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.மஹுவா மொய்த்ரா வெளியிட்ட பதிவில், “உங்கள் (தேர்தல் ஆணையம்) தேர்தல் பார்வையாளர் சி.எஸ்.முருகன் ஐஏஎஸ் அதிகாரியை சிறிது கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு அவர் பல்வேறு ரகசிய வாட்ஸ்-அப் குரூப்கள் மூலம் தவறான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது” என்று கூறியிருந்தார்.
மேலும், அந்த பதிவில் `குயிக்கன் முருகன்' தெலுங்கு திரைப் படத்தில் வரும் கேரக்டர் புகைப்படத்தையும் அதில் இணைத்திருந்தார். இதற்கு பதிலடி தரும் விதமாக நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் சி.எஸ்.முருகன் கூறும்போது, “அந்தப் படத்தில் வெளியிட்டுள்ளது போல என்னிடம் அதிக அளவு துப்பாக்கிகள் இல்லை.
இருப்பினும், தமிழ்நாடு காவல் துறையில் நான்கரை ஆண்டுகள் பயிற்சி பெற்றபோது, பல்வேறு வகையான துப்பாக்கிகளைக் கையாளவும், சட்டப்பூர்வமாகவும் திறம்படவும் அவற்றைப் பயன்படுத்த எனக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது” என்று கூறியருந்தார்.
இந்நிலையில் ரகசிய வாட்ஸ்-அப் குரூப்கள் மூலம் வாக்காளர்களின் பெயர்களை நீக்க முருகன் உத்தரவிட்டு வருகிறார் என்று திரிணமூல் பொதுச் செயலரான அபிஷேக் பானர்ஜியும் நேற்று குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்காகவே நுண் பார்வையாளர்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர் என்றும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.
